சிங்கிள் சிறுத்தையை, ஒரு ஊரே சேர்ந்து அடித்து கொன்ற பரிதாபம்.. அதிர்ச்சி வீடியோ
குருகிராம் அருகே கிராமத்தில் புகுந்த சிறுத்தை கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குருகிராம்: ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே கிராம மக்கள் சேர்ந்து ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பாக குர்கான் என அழைக்கப்பட்டு வந்த குருகிராம் அருகில் உள்ள மந்தாவர் கிராமத்திற்குள் வியாழக்கிழமை சிறுத்தை ஒன்று உணவு தேடி தவறுதலாக புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் அந்த சிறுத்தை பாய்ந்து திடீரென விரட்டியுள்ளது.
சுமார் 3 மணி நேரமாக அந்த சிறுத்தை அந்தக் கிராம மக்களை துரத்தி துரத்தி விரட்டியதாக கூறப்படுகிறது.
அங்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினராலும் அந்த சிறுத்தையை பிடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் கிராமத்திற்கு வெளியே சுந்தர் என்ற இளைஞர் அந்த சிறுத்தையை பார்த்துள்ளார். இந்நிலையில், கிராமத்திற்குள் புகுந்த அந்த சிறுத்தை மக்களை துரத்தி உள்ளது. இதற்கு முன்பாக அருகில் உள்ள கிராமத்தில் மாடு, ஆடு ஆகியவற்றை அந்த சிறுத்தை அடித்துக் கொன்றிருப்பதாக கிராம பஞ்சாயத்து தலைவர் தன்சிங் தெரிவித்துள்ளார்.
வனத்துறையினர் அந்த சிறுத்தையை சுட்டு பிடிப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தன்சிங் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில்,அங்குள்ள வீட்டில் துணிதுவைக்கும் அறையில் சிக்கிய சிறுத்தையை கிராம மக்கள் ஒன்று கூடி அடித்துக் கொன்றனர்.
அதனைத் தொடர்ந்து அந்த செத்த சிறுத்தையை பிரதான சாலைக்கு இழுத்து வந்த கிராமத்தினர் அதனை சாலையில் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மயக்க மருந்து செலுத்தி அந்த சிறுத்தையை உயிருடன் பிடிக்க வனத்துறையினர் தவறிவிட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்கப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.