ஹஜ் கூட்டநெரிசல் விபத்து: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 58க உயர்வு, 78 பேர் மாயம்
டெல்லி: மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டோர் கடந்த மாதம் 24ம் தேதி மெக்கா நகரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மினா நகருக்கு சென்றனர். அவர்கள் சாத்தான் மீது கல்லெறியும் சடங்கில் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் பலியாகினர். கூட்ட நெரிசலில் சிக்கி 769 பேர் பலியானதாக சவுதி அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் இருப்பதிலேயே ஈரானைச் சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் பலியாகியுள்ளனர். ஈரானைச் சேர்ந்த 464 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் மினா கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஹஜ் கூட்ட நெரிசல் - 58 இந்தியர்களை இழந்துள்ளோம். மேலும் 78 பேரை காணவில்லை. அவர்களை கண்டுபிடிக்கத் தேவையான அனைத்தையும் செய்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.