தீவிரவாத ஒழிப்பில் பாக். உறுதியாக இருந்தால், முதலில் தாவூத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கட்டும்: வெங்கய்ய
தீவிரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் உறுதியாக இருக்குமானால், தேடப்படும் குற்றவாளிகளான ஹபீஸ் சையத், தாவூத் இப்ராஹிமை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கய்ய நாயுடு மேலும் கூறியதாவது: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவும் மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சையத்தும் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கிறார். இவ்விருவரையும் இந்தியாவிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு எடுக்க வேண்டும். அப்போதுதான் தீவிரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் உறுதியாக இருப்பதாக கருத முடியும். இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.