சியாச்சின் ஹீரோ ஹனுமந்தப்பா உடலுக்கு ராணுவ மரியாதை! மோடி, சோனியா இரங்கல்
டெல்லி: சியாச்சின் மலைப்பகுதியில் பனிச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்தார். அவரது உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. ஹனுமந்தப்பா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சியாச்சின் மலை பிரதேசத்தில் பனி சரிவில் சிக்கி 6 நாட்கள் உயிரோடு இருந்த ஹனுமந்தப்பா, டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் இன்று மதியம் உயிரிழந்தார்.
Three Service Chiefs pay last respects to Lance Naik Hanamanthappa at Brar Square (Delhi) pic.twitter.com/cUbJQvcGJm
— ANI (@ANI_news) February 11, 2016
இதுகுறித்து பிரதமர் மோடி டிவிட்டரில் கூறியுள்ளதாவது: நம்மையெல்லாம் கவலையிலும், ஆதங்கத்திலும் ஆழ்த்திவிட்டு லேன்ஸ் நாயக் ஹனுமந்தப்பா பிரிந்து சென்றுள்ளார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அந்த ராணுவ வீரர், அழியா புகழ் பெறுவார். இந்தியாவுக்கு சேவை செய்யும் உங்களை போன்ற வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சார்பில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஹனுமந்தப்பா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாலையில், டெல்லி பிரார் சதுக்கத்தில், அஞ்சலிக்காக ஹனுமந்தப்பா உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு, ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி போன்றோர் ஹனுமந்தப்பா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ஹனுமந்தப்பா உடல் நாளை கர்நாடக மாநிலம், தார்வார் மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.