யோகாவில் சிறந்தவர் ஹனுமந்தப்பா.. சக வீரர்களுக்கு மூச்சுப் பயிற்சி கொடுத்து வந்தவர்!
டெல்லி: சியாச்சினில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்த வீரர் ஹனுமந்தப்பா கடவுள் பக்தி மிக்கவர், யோகா நிபுணர் ஆவார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உலகின் மிக உயரமான போர் முனையான சியாச்சினில் கடந்த 3ம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் மெட்ராஸ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த 10 பேர் சிக்கினர். அதில் வீரர் ஹனுமந்தப்பா மட்டும் 6 நாட்கள் கழித்து 25 அடி ஆழ பனியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை காலை டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை 11.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
கர்நாடகா
ஹனுமந்தப்பா கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள பெடாதுர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் மகள் உள்ளார்.
ஹனுமார்
ஹனுமாரின் நினைவாக அவருக்கு ஹனுமந்தப்பா என்று பெயர் வைத்ததாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார். தனது மகன் குணமாகி வருவார் என்று எதிர்பார்த்த அவருக்கு ஹனுமந்தப்பாவின் மரணம் பேரதிர்ச்சியாக உள்ளது.
பனி
சியாச்சினில் ஹனுமந்தப்பா சிக்கியிருந்த இடத்தில் சிறு துவாரம் இருந்து அதன் வழியாக காற்று வந்ததால் தான் அவர் 6 நாட்களாக உயிருடன் இருந்துள்ளார்.
யோகா நிபுணர்
13 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய ஹனுமந்தப்பாவுக்கு கடவுள் பக்தி அதிகம். அவர் தினமும் யோகா செய்வாராம். மேலும் தன்னுடன் இருந்த வீரர்களுக்கும் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சியும் கற்றுக் கொடுத்துள்ளார்.
கிராமம்
ஹனுமந்தப்பாவின் மரணம் குறித்து தகவல் அறிந்த பெடாதூர் கிராமத்தினர் அவரின் வீட்டிற்கு முன்பு கூடியுள்ளனர். அவர் குணமடைந்து வருவார் என்று நம்பிய அந்த கிராமமே தோகத்தில் ஆழ்ந்துள்ளது.