ஜனநாயக நாட்டில் தனி மனித சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையில்லையா?: உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையில்லையா என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
தனி மனித சுதந்திரம் என்பது அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையா என்பது குறித்து, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இன்று விசாரித்து வருகிறது.
ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் அரசாணைகளை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதில், ஆதார் என்பது, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள தனிமனித சுதந்திரத்தை மீறுவதாக உள்ளது என, ஒரு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி, கேஹர் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனிமனித சுதந்திரம், அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றா என்பது குறித்து, ஒன்பது நீதிபதிகள் அமர்வு, இன்று முதல் விசாரிக்கும் என, அறிவிக்கப்பட்டது.
இன்றைய விசாரணையின்போது, ஒரு ஜனநாயக நாட்டில், எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் செயல்படும் ஒரு நாட்டில், தனி மனித சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையில்லை என்று கூறுவதை ஏற்பதற்கு கஷ்டமாக உள்ளது என நீதிமன்றம் கூறியது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.