தற்கொலை செய்ய வேண்டாம்… போலீசை கொல்லுங்கள்...: வாட்ஸ் அப்பில் பரவும் ஹர்திக் படேல் வீடியோ!
அகமதபாத்: பட்டேல் சமுதாய இளைஞர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது... அதற்கு பதிலாக 2 அல்லது 5 போலீசையாவது கொல்லுங்கள் என்று ஹர்திக் படேல் பேசிய வீடியோ வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி குஜராத் மாநிலத்தில் மேலும் சூட்டைக் கிளப்பி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் வாழும் படேல் சமூகத்தினர், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சமீபகாலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு ஹர்திக் படேல், 22 என்ற இளைஞர் தலைமை தாங்கி வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி அகமதாபாத்தில் இவர்களின் பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த போராட்டத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் குஜராத் மாநிலத்தில் பல நாட்களாக பதற்றம் நிலவிவருகிறது. அப்போதிலிருந்து ஹர்திக் பட்டேல் போலீசாரை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.
போராட்டம் நீடிப்பு
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஹர்திக் படேல் தலைமையில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், ஹர்திக் பட்டேல் நடத்தும் போராட்டத்துக்கு தனது உயிரை தியாகம் செய்யத் தயார் என்று சூரத்தை சேர்ந்த விபுல்தேசாய் என்ற இளைஞர் அறிவித்தார். இதையடுத்து ஹர்திக் பட்டேல் நேற்று விபுல் தேசாய் வீட்டுக்கு சென்றார். அவருடன் உள்ளூர் டி.வி.சேனல் செய்தியாளர்களும் சென்றனர்.
ஹர்திக் படேல் அறிவுரை
பின்னர் விபுல்தேசாய் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘‘என்னிடம் பேசிய ஹர்திக் பட்டேல், நாம் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. உங்களுக்கு தைரியம் இருக்கும் என்றால் 2 அல்லது 3 போலீசாரை கொல்லுங்கள். ஏனென்றால் நாம் பட்டேல் சமூகத்தினரின் மைந்தர்கள் என்று அறிவுரை கூறினார் எனத் தெரிவித்தார்.
பரபரப்பு வீடியோ
இதனிடையே ஹர்திக் பட்டேலும் விபுல் தேசாயும் பேசிய இந்த உரையாடல் வீடியோ வடிவில் தற்போது வாட்ஸ் அப் மூலம் வேகமாக பரவி அங்கு வைரலாகி வருகிறது. போலீசை கொல்லுங்கள் என்று ஹர்திக் படேல் பேசியது குஜராத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வலுக்கும் எதிர்ப்பு
ஹர்திக் பட்டேலின் அறிவுரைக்கு, குஜராத்தில் பட்டேல் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தை முதன் முதலில் தொடங்கிய சர்தார் பட்டேல் குழு அமைப்பாளர் லால்ஜி அதிருப்தி தெரிவித்து இருக்கிறார்.
காந்திய வழி
நமது போராட்டம் காந்திய வழியில் அமையவேண்டும். யாரையும் கொலை செய்யக் கூடாது. இதுபோன்ற அறிவுரை நமது போராட்டத்தின் நோக்கத்தை கெடுத்துவிடும். எனவே ஹர்திக் பட்டேலின் அறிவுரையில் இருந்து நாம் விலகி இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார் சர்தார் பட்டேல் குழு அமைப்பாளர் லால்ஜி
ஹர்திக் மறுப்பு
இதனிடையே, ஹர்திக் பட்டேல், போலீசாரை கொல்லும்படி தான் அறிவுரை வழங்கியதாக கூறியதை மறுத்துள்ளார். ‘‘போலீசாரை கொல்ல வேண்டும் என்பது போன்ற அறிவுரை எதையும் நான் வழங்கவில்லை. இது மக்களை திசை திருப்புவதாகும். இதுபோல் அறிவுரையை அளித்ததற்கான வீடியோ அல்லது ஆடியோ ஆதாரத்தை முதலில் காட்டுங்கள். அதன்பிறகு என் மீது நடவடிக்கை எடுங்கள்'' என்று கூறியுள்ளார்.