குஜராத் கிளர்ச்சியின் நாயகன் ஹர்திக் பட்டேல் ஒரு ஹீரோ: மோடியை சீண்டும் சிவசேனை
மும்பை: குஜராத்தில் பட்டேல்களின் கிளர்ச்சிக்கும் அதைத்தொடர்ந்த கலவரங்களுக்கும் மூல காரணமாக இருக்கும் ஹர்திக் பட்டேலை ஹீரோ என்று வர்ணித்துள்ளது சிவசேனை.
பட்டேல் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடும் ஹர்திக் பட்டேலுக்கு ஆதரவாக 5 லட்சம் பேர் திரண்டு மாநாடு நடத்தி குஜராத்தை திரும்பி பார்க்க வைத்தனர். அன்றைய தினம் ஹர்திக் உண்ணாவிரதம் இருக்கப்போக அவரை குஜராத் காவல்துறை கைது செய்தது. இதையடுத்து பட்டேல் சமூகத்தினர் நடத்திய கலவரத்தால் குஜராத் ஸ்தம்பித்தது.
இந்நிலையில், சிவசேனை கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் இன்று வெளியாகியுள்ள கட்டுரை, மோடியை சீண்டுவதாக அமைந்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது: இதுவரை அரசியல்வாதிகளால் மட்டுமே கூட்டம் சேர்க்க முடியும் என்ற நிலையை ஹர்திக் மாற்றியுள்ளார். மக்களின் ராஜாவாக அவர் மாறியுள்ளார். குஜராத்தின் ஹீரோ ஹர்திக் பட்டேல்.
இதுவரை மோடி, சர்தார் வல்லபாய் பட்டேல் பெயரைத்தான் அடிக்கடி கூறி வந்தார். இப்போது, ஹர்திக் பட்டேல் பெயர் அவரது வாயில் உச்சரிக்கப்படுகிறது. குஜராத் அமைதியான மாநிலம் என்று கூறிவந்தார்கள். அதன் உண்மையான முகம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதே நிலை நீடித்தால் 2017ல் குஜராத்தில் தாமரை மலர முடியாது.
குஜராத்தில் பட்டேல் சமூகம் முன்னேறிய நிலையில் உள்ளது. மகாராஷ்டிராவில் மராத்தாக்கள் அப்படித்தான் உள்ளனர். குஜராத்தின் தற்போதைய முதல்வர் ஆனந்தி, முன்னாள் முதல்வர்கள் சிமான்பாய் பட்டேல், கேசுபாய் பட்டேல் மற்றும் பாபுபாய் பட்டேல் போன்றோர்கள் பட்டேல் சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். அப்படியிருந்தும், எங்களுக்கு இட ஒதுக்கீடு சலுகை வேண்டும் என்று பட்டேல் சமூகத்தினர் கேட்கின்றனர்.
குஜராத்தில் வைர வியாபாரம், பெரிய தொழிலதிபர்களாகும் பட்டேல் சமூகத்தினர் உள்ளனர். மகாராஷ்டிராவில் மராத்தாக்களும் அப்படியே பலம் பொருந்தியவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் என்றுமே வன்முறையில் ஈடுப்டடது கிடையாது. தங்கள் கோரிக்கைகளை அவர்கள் நியாயமான முறையில்தான் கேட்டுவருகின்றனர். இவ்வாறு சாம்னா கட்டுரை நீள்கிறது.