ஹர்திக் படேல் மீதான தேசதுரோக வழக்கில் சில பிரிவுகளை ரத்து செய்தது குஜராத் ஹைகோர்ட்!
அகமதாபாத்: இடஒதுக்கீடு கோரி போராடிய குஜராத் படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேலின் நடவடிக்கைகளை அரசுக்கு எதிரான போராக கருதக் கூடாது என்று அம்மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இடஒதுக்கீடு கொடு அல்லது இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டு என்ற முழக்கத்துடன் போராட்டம் நடத்தி வருபவர் ஹர்திக் படேல். அவர் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் தேசதுரோக வழக்கை போட்டுள்ளது குஜராத் அரசு.
இதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஹர்திக் படேலும் அவரது ஆதரவாளர்களும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்திவாலா, ஹர்திக் படேலின் நடவடிக்கைகளை அரசுக்கு எதிரான போராக கருத வேண்டியதில்லை எனக் கூறினார்.
மேலும் ஹர்திக் உள்ளிட்டோர் மீது இதற்காக போடப்பட்ட ஐ.பி.சி. 121 மற்றும் இருபிரிவினரிடையே மோதலைத் தூண்டியதாக போடப்பட்ட 153-A, தேச ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயலுக்கான 153B ஆகிய பிரிவுகளையும் அவர் ரத்து செய்தார்.
இருப்பினும் ஹர்திக் மீது போடப்பட்ட தேசதுரோகம் தொடர்பான பிரிவான 124, அரசுக்கு எதிரான போருக்கான சதியில் ஈடுபட்டதற்கான 121-A ஆகிய பிரிவுகளை ரத்து செய்யவும் நீதிபதி மறுத்துவிட்டார். இந்த பிரிவுகளின் கீழான வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
அத்துடன் வேறு வழக்குகளில் ஹர்திக் படேலை கைது செய்ய 15 நாட்களுக்கு இடைக்கால தடையையும் விதித்துள்ளது குஜராத் உயர்நீதிமன்றம்,