ஐஏஎஸ் அதிகாரி மகளைக் கடத்த முயற்சி.. பாஜக தலைவர் மகன் கைது.. ஹரியானாவில் பரபரப்பு
ஐஏஎஸ் அதிகாரி மகளைக் கடத்த முயன்ற வழக்கில் ஹரியானா மாநில பாஜக தலைவர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சண்டிகார்: ஹரியானா மாநில ஐஏஎஸ் அதிகாரியின் மகளைக் கடத்த முயன்ற வழக்கில் பாஜக தலைவர் மகன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வருபவரின் மகளை, கடந்த வெள்ளிக் கிழமை அன்று ஹரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் என்பவரும், அவரது நண்பர் ஆசிஷ் என்பவரும் பின் தொடர்ந்தனர். மேலும், அவரைத் தொல்லை செய்து கடத்தவும் முயற்சி செய்தனர். இதனை அடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, பாஜகவின் அழுத்தத்தால் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஹரியானாவில் ஏற்படுத்தியது. மேலும், பெண்ணைக் கடத்த முயன்ற இருவரையும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது குறித்து அம்மாநில மகளிர் ஆணையம் கேள்வி கேட்டு பிரச்சனையை கையில் எடுத்தது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, இந்த வழக்கில் முறையாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை நாடாப் போவதாக எச்சரித்தார். இந்தக் கடத்தலில் பாஜக தலைவர் மகன் ஈடுபட்டுள்ளதால், இதனை மறைக்கவே போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் கடத்தல் முயற்சி எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், சண்டிகர் போலீசாரோ, கடத்தல் முயற்சியின் கீழ் வழக்கைப் பதிவு செய்யாமல், பெண்ணைப் பின்தொடர்தல் மற்றும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனை அம்மாநில காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டித்தன.
இதனால் திணறிப் போன போலீசார், குற்றம்சாட்டப்பட்ட இருவரும் போலீசில் ஆஜராக உத்தரவிட்டனர். ஆனாலும், பாஜக தலைவர் மகன் என்ற கெத்தில் ஆஜராகாமல் விகாஸ் மற்றும் ஆசிஷ் போக்கு காட்டி வந்தனர். போலீசார் விதித்த காலக்கெடு முடிந்து 3 மணி நேரம் கடந்த நிலையில் வேறு வழியில்லாமல் அவர்கள் இருவரும் போலீசார் முன் ஆஜரானார்கள்.
இதனையடுத்து, இவரும் இளம்பெண்ணைக் கடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 365 மற்றும் 511-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் நாளைக் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.