ஹரியானா அமைச்சருடன் வாதமிட்டு அதிரடியாக பதிலளித்த பெண் எஸ்.பி. அதிரடி இடமாற்றம்
சண்டிகர் : ஹரியானாவில், ஃபாட்டாபாத் மாவட்ட குறைதீர்க்கும் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ்ஜுடன் கடும் வாதம் புரிந்து சர்ச்சையை ஏற்படுத்திய மாவட்ட பெண் எஸ்.பி.சங்கீ்தா கலியா தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஃபாட்டாபாத் மாவட்ட எஸ்.பியாக இருப்பவர் சங்கீதா கலியா. இம்மாவட்டத்தில் மாவட்ட குறை தீர்ப்புக் கூட்டம் நடந்தது. அதில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் கலந்து கொண்டார். அப்போது முறையற்ற மது விற்பனை தொடர்பாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எஸ்.பியிடம் அமைச்சர் கேட்டார்.
அதற்கு அவர் கடந்த 10 மாதங்களில் 2,500 வழக்குகள் முறையற்ற மது விற்பனையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், அவருடைய பதிலால் அமைச்சர் திருப்தி அடையவில்லை. எஸ்.பியிடம் கடுமையாக பேசினார் அமைச்சர். மேலும் போலீஸாரும், கள்ளச்சாராய வியாபாரிகளும் கை கோர்த்து செயல்படுவதாக குற்றம் சாட்டினார். இதனால் கோபமடைந்த எஸ்.பி, அரசுதானே மது விற்பனைக்கு லைசென்ஸ் தருகிறது என்று சூடாக கூற அதிர்ச்சி அடைந்தார் அமைச்சர்.
இதையடுத்து, சங்கீதா கூறியதற்குப் பதிலளிக்காத அமைச்சர், அவரை கூட்டத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதையடுத்து அமைச்சரும், அவருடன் கூடவே மற்ற கட்சி நிர்வாகிகளும் வெளியேறிவிட்டனர். அதன் பின்னர் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சோலங்கி தலைமையில் தொடர்ந்து நடைபெற்றது. இச்சம்பவம் பற்றி தான் கருத்து கூற விரும்பவில்லை என எஸ்.பி சங்கீதா தெரிவித்திருந்தார்.
இதுபற்றி அனில் விஜிடம் கேட்ட போது, "இந்த பிரச்னையை முதல்வரிடம் எடுத்துச் செல்ல உள்ளேன். கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தின் போதே முறையாக பணியாற்றும்படி எஸ்.பி சங்கீதாவை எச்சரித்தேன். இருந்தும் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வரை நான் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை" என தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது சங்கீதா கலியா அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை மனீசரில் உள்ள இந்திய ரிசர்வ் போலீஸ் பட்டாலியன் தலைவராக நியமித்துள்ளனர்.
அமைச்சரின் புகாருக்கு உடனுக்குடன் பதில் அளித்த எஸ்.பியை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ள செயல் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்பட்டுள்ளது.