சென்னை பெண்ணை பலிகொண்ட பெங்களூர் குண்டுவெடிப்பு: ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் கைது
பெங்களூர்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பெங்களூரில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு பெங்களூர் எம்.ஜி.ரோடு பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த கைதின் மூலம், குண்டு வெடிப்பு வழக்கில் முதல்முறையாக துப்பு கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவிக்கிறார்கள்.
2014ம் ஆண்டு, டிசம்பர் 28ம் தேதி பெங்களூர், எம்.ஜி.ரோட்டை அடுத்த சர்ச் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
சென்னை பெண்
இந்த குண்டு வெடிப்பில் சிக்கி, மண்டை ஓடு உடைந்ததில், சென்னை அண்ணாசாலை பகுதியை சேர்ந்த பவானி தேவி என்ற இரு குழந்தைகளின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்து மீண்டனர்.
என்.ஐ.ஏ விசாரணை
இந்த கொலை தாக்குதல் வழக்கை விசாரித்து வந்த பெங்களூர் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் வழக்கு தேக்கமடைந்தது. பெங்களூர் போலீசாரால் விசாரிக்க முடியாத நிலையில், சமீபத்தில் இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு எடுத்தது.
வீடியோ காட்சி
என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, சம்பவ இடத்தின் அருகே பதிவான வீடியோவில் ஒரு காட்சி அவர்களுக்கு சந்தேகத்தை தூண்டியது. அந்த வீடியோ காட்சியில் எம்.ஜி.ரோடு பகுதியில் கையில் பையுடன், தலையில் தொப்பியும், நீல நிற சட்டையும் அணிந்து ஒரு செல்லும் நபர் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த நபர் மீது என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது.
மக்களிடம் கோரிக்கை
சந்தேகத்திற்கிடமான அந்த நபர் கையில் வெடிகுண்டு இருந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர்.எனவே அந்த வீடியோவை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவிலுள்ள நபர் குறித்து தகவல் தெரிந்தால், பெங்களூர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
ஐஎஸ்ஐஎஸ்
இந்நிலையில், இவ்வழக்கில் தற்போது முக்கிய துப்பு கிடைத்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின்பேரில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா பகுதியில் அலீம்ஜப் அப்ரிடி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடன் தோற்றமும், குண்டு வெடிப்பு வீடியோவில் இருப்பவர் தோற்றமும் ஒரே போன்று இருந்தது.
குண்டு வைத்ததாக ஒப்புதல்
இதையடுத்து அப்ரிடியிடம் உரிய வகையில் விசாரித்தபோது, குண்டு வைத்தது தான்தான் என்பதை ஒப்புக்கொண்டார். 3 வருடங்களாக பெங்களூரில் தங்கியிருந்து மெக்கானிக்காக வேலை பார்த்தபடி, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கான ஆதாரங்களை காவல்துறை திரட்டியதும், பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.