ஷீனாவே வெறுத்தேன், ஆனால் கொல்லவில்லை.. சொல்கிறார் இந்திராணி
மும்பை: ஷீனா போராவை நான் வெறுத்தது உண்மைதான். ஆனால் கொலை செய்யவில்லை என்று கூறியுள்ளாராம் இந்திராணி முகர்ஜி.
தன்னிடம் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகளிடம் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளாராம் இந்திராணி போரா. மேலும் ஷீனாவைக் கொலை செய்தது தனது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னாதான் என்றும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளாராம்.
சனிக்கிழமை இவர்கள் இருவரையும் வைத்து மாறி மாறி விசாரணை நடத்தியுள்ளனர் போலீஸார். இருவரையும் ஒன்றாக அமர வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக குற்றம் சாட்டிக் கொண்டார்களாம்.
வெறுத்தேன், கொல்லவில்லை
போலீஸாரிடம் இந்திராணி கூறுகையில், நான் எனது மகளை வெறுத்தேன். அது உண்மைதான். ஆனால் கொலை செய்யவில்லை. அதைச் செய்தது சஞ்சீவ் கன்னாதான் என்று கூறினாராம்.
பணம் தருவதாக கூறினார் இந்திராணி
சஞ்சீவ் கன்னா போலீஸாரிடம் கூறுகையில், இந்த வழக்கில் என்னை இழுத்து விட்டதே இந்திராணிதான். அவர்தான் எனக்கு பண உதவி செய்வதாக ஆசை காட்டினார். அதனால்தான் இதில் நான் தலையிட்டேன்.
மோசமான உறவுகள், நம்பிக்கையின்மை
இந்த விசாரணை மூலம் இந்திராணிக்கும், அவரது பிள்ளைகளான ஷீனா, மிக்கியல் போராவுக்கும் இடையே உறவு சரியில்லை என்பதும், கோபம், நம்பிக்கையின்மை இரு பக்கத்திலும் இருந்தது என்பதும் போலீஸாருக்குத் தெளிவாகியுள்ளது.
மகனை மன நல காப்பகத்தில் சேர்த்த இந்திராணி
நேற்று ஒரு ஹோட்டலில் வைத்து இந்திராணியின் மகன் மிக்கயிலிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தன்னை இந்திராணி, புனேவில் உள்ள ஒரு மன நல காப்பகத்தில் சில மாத காலம் சேர்த்து விட்டார் என்று கூறியுள்ளார் மிக்கயில்.