ட்ரம்புக்கு ஒழுங்கா ஒரு உத்தரவு கூடபோடத் தெரியலியா? மறுபடியும் தடை போட்ட நீதிபதி!!
ஹனலுலு(யு.எஸ்) ஹவாயி மாநிலத்தில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில், அதிபர் ட்ரம்பின் புதிய குடியேற்ற ஆணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆறு நாடுகளைச் சார்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்க தடை விதித்து இந்த ஆணை பிறப்பிக்கப் பட்டிருந்தது.
அமலுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், ஹவாயி அமெரிக்க மாவட்ட நீதிபதி டெரிக் வாட்சன் புதிய ஆணைக்கு தடை விதித்துள்ளார்.
ஹவாயி மாநிலத்தின் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. மா நில அட்டர்னி ஜெனரல் டக் சின், புதிய ஆணை அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பான முஸ்லீம் தடை தான் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
ஹவாயி மா நிலம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குடியுரிமை அடிப்படையிலான இந்த புதிய ஆணை ஹவாயின் சுற்றுலாத் தொழிலைப் பாதிப்பதோடு வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதிலும் சிக்கல் ஏற்படுத்துகிறது என்று வாதாடினார்.
அமெரிக்க நீதித்துறை சார்பாக, பழைய ஆணையில் இருந்த சட்ட சிக்கல்கள் புதிய ஆணையில் களையப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.
நீதிபதி டெரிக் வாட்சனின் தடையைத் தொடர்ந்து ட்ரம்பின் ஆறு நாடுகளின் மக்களுக்கு அமெரிக்காவுக்குள் வர அனுமதி மறுக்கும் புதிய ஆணை அமலுக்கு வரவில்லை.
மேரிலாண்ட் மற்றும் வாஷிங்டன் மா நிலங்களின் நீதிமன்றங்களிலும் இந்த ஆணை மீதான எதிர்ப்பு தெரிவித்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் மீதும் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது.
இரண்டு வழக்குகளிலும் நீதிபதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வில்லை. முன்னதாக 7 நாடுகளைச் சார்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்து ஆணை பிறப்பித்து இருந்தார்.
அதை எதிர்த்து பத்துக்கு மேற்பட்ட அமெரிக்க மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு தடைகள் விதித்து இருந்தன. மேல் முறையீட்டு வழக்கிலும் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஆணையை ட்ரம்ப் கைவிட்டார்.
அனைத்து முக்கிய துறையினரிடமும் கலந்தாலோசித்து பிறப்பிக்கப்பட்ட , புதிய ஆணை மீதும், நீதிமன்றம் தடை விதித்து இருப்பது அதிபர் ட்ரம்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
-இர தினகர்