ஜாட் உட்பட 6 ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் ஹரியானா அரசின் சட்டத்துக்கு ஹைகோர்ட் இடைக்கால தடை
சண்டிகர்: ஜாட் உட்பட 6 ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் ஹரியாணா மாநில அரசின் முடிவுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஹரியாணா மாநில சட்டசபையில் கடந்த மார்ச் 29-ந் தேதியன்று பிற்படுத்தப்பட்டோர் ஜாட், ஜாட் சீக்கியர்கள், முஸ்லிம் ஜாட்கள், பிஷ்னாய் பிரிவினர், ரோர்கள், த்யாகி பிரிவு சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பிவானியைச் சேர்ந்த முராரி லால் குப்தா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், புதிய சட்டத்தின் கீழ் ஜாட்கள் மற்றும் பிற 5 சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் முடிவு உண்மையில் கே.சி.குப்தா என்பவரது கமிஷன் அறிக்கையின் மேல் எடுக்கப்பட்ட முடிவாகும், ஆனால் அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்து விட்டது; ஆகையால் உச்ச நீதிமன்றம் நிராகரித்த கமிஷன் அறிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது எனக் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் ஜாட்கள் சமூக, கல்வியியல், அரசியல் ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் அல்ல என்று உச்சநீதிமன்றத்தில் கூறியதையும் முராரி லால் தம்முடைய மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதை இன்று விசாரித்த பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.எஸ்.சரோன் தலைமையிலான பெஞ்ச் ஜாட்கள் உட்பட 6 சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டு வழங்கும் ஹரியானா அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.