பார்ச்சூன் இதழின் சிறந்த பிசினஸ்மேன் பட்டியலில் ஒரே ஒரு இந்தியர் “அஜய் சிங் பங்கா”!
டெல்லி: பார்ச்சூன் இதழின் 2014ம் ஆண்டின் சிறந்த பிசினஸ்மேன் பட்டியலில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். அவர் மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயலதிகாரியுமான அஜய் சிங் பங்கா ஆவார்.
டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரம் படித்தவர் பங்கா. அகமதாபாத் இந்திய நிர்வாகவியல் கழகத்தில் எம்.பி. ஏ முடித்தவர்.
பார்ச்சூன் பட்டியலில் இவருக்கு 28வது இடம் கிடைத்துள்ளது. புனேயில் பிறந்தவரான பங்கா, 13 ஆண்டு காலம் நெஸ்லே இந்தியா நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். பின்னர் பெப்சிகோ, சிட்டிகுரூப் ஆகிய நிறுவனங்களிப் பணியாற்றி கடந்த 2009ம் ஆண்டு முதல் மாஸ்டர்கார்ட் நிறுவனத்தில் பணியில் இணைந்தார்.
பார்ச்சூன் பட்டியலில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி லாரி பேஜ் முதலிடத்தில் இருக்கிறார்.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இன்னொரு இந்திய முகம் சத்யா நாதெள்ளா. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான நாதெள்ளா இந்திய அமெரிக்கர் ஆவார். இவர் 38வது இடத்தில் இருக்கிறார். நாதெள்ளா கர்நாடகத்தின் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். 3வது இடத்தில் கிலியாட் தலைமை செயலதிகாரி ஜான் மார்ட்டின் இருக்கிறார்.
இந்தப் பட்டியலில் மொத்தம் 50 சிஇஓக்கள் இடம் பிடித்துள்ளனர்.