ஹெட்லி வாக்குமூலம் பாகிஸ்தானை அம்பலப்படுத்தியுள்ளது... அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம்
மும்பை: அமெரிக்காவில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் தீவிரவாதி டேவிட் ஹெட்லி அளித்த வாக்குமூலம் முக்கியமானது என்றும், இதன் மூலம் இந்த வழக்கில் பாகிஸ்தானின் தொடர்பு அம்பலமாகியுள்ளது என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் தெரிவித்துள்ளார்.
மும்பையில், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 166 பேர் பலியானார்கள். 309 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய டேவிட் ஹெட்லி, பின்னர் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளான். இந்நிலையில், ஒரு வழக்குத் தொடர்பாக டேவிட் ஹெட்லியை அமெரிக்கப் போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் அவருக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் அங்கிருந்த படி மும்பை நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட ஹெட்லி, இன்று அதே முறையில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். நாளையும் தொடர்ந்து அவர் வாக்குமூலம் அளிக்க இருக்கிறார்.
இந்நிலையில், ஹெட்லியின் இந்த வாக்குமூலம் மூலமாக, மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு அம்பலமாகியுள்ளது என மத்திய அரசு வக்கீல் உஜ்வால் நிகாம் கூறியுள்ளார் . இன்றைய வாக்குமூலத்தில் ஹெட்லி கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் உஜ்வால். அப்போது அவர் கூறியதாவது:-
பேர் மாற்றம்...
முதலில் தாவூத் ஹிலானி என்ற பெயருடன் இருந்த ஹெட்லி லஷ்கர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த பின்னர், தனது பெயரை டேவிட் ஹெட்லி என மாற்றியுள்ளார். கடந்த 2002 ல் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த ஹெட்லிக்கு அங்கு 2 வருட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
5 மணி நேர விசாரணை...
ஹெட்லியிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. அப்போது, ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததை ஹெட்லி ஒப்பு கொண்டார்.
படகு மூலம் தாக்குதல்...
இதற்கு முன்னதாக 2 முறை முறை இந்தியாவில் கொடூர தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் அது தோல்வி அடைந்துள்ளது. அப்போது பாகிஸ்தானில் இருந்து படகு மூலம் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைய முயற்சித்துள்ளனர். ஆனால், வழியில் படகு உடைந்து விட்டதால் அம்முயற்சி தோல்வியடைந்தது. ஆனால், இந்த விபத்தில் தீவிரவாதிகள் யாரும் உயிரிழக்கவில்லை.
ஹபீஸ் சையீது...
ஹபீஸ் சையீது நேரிடையாக இந்தியாவுக்கு எதிரான தேச விரோத செயல்களில் ஈடுபடுமாறு ஹெட்லியிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக பல ஆலோசனைகளயும் அவர் கூறியுள்ளார். முதலில் காஷ்மீரில் இந்திய தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் ஹெட்லி.
புதிய ஆதாரம்...
இன்று ஹெட்லி அளித்துள்ள இந்த வாக்குமூலம் மிக முக்கியமானது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு மேலும் பலமான ஆதரம் கிடைத்துள்ளது' என அவர் தெரிவித்துள்ளார்.