ஹார்ட் கரெக்டா ‘லப் டப்’னு துடிக்குதா... இனி, செல்போனிலேயே செக் பண்ணிக்கலாம் !
தானே: இதயத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, தானே டாக்டர்கள் குழு, ‘ஹார்ட் ஹெல்த் மீட்டர்' என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.
பணிச்சுமை மற்றும் உணவுப் பழக்க வழக்க மாற்றங்களால் தற்போது மக்களின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப் படுகிறது. இதனால் அடிக்கடி டாக்டர்களைச் சந்தித்து நலம் விசாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இத்தகைய செக்கப்களுக்கு டாக்டர்கள் போடும் பில்லால் நமக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்புகள் அதிகம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தானே டாக்டர்கள் குழு புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றைத் தயாரித்துள்ளது.
பொன் விழா
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் பல்வேறு இதய சிகிச்சை கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகள் கொண்ட அமைப்பான மாதவ்பாக்கின் 50ம் ஆண்டு விழாவையொட்டி இந்த புதிய மொபைல் அப்ளிகேஷன் வெளியிடப்பட்டுள்ளது.
ஹார்ட் ஹெல்த் மீட்டர்...
இதய அறுவை சிகிச்சை டாக்டர்களும், ஐடி பிரிவினரும் இணைந்து வடிவமைத்துள்ள இந்த அப்ளிகேஷனுக்கு ‘ஹார்ட் ஹெல்த் மீட்டர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
எப்போ ஹார்ட் அட்டாக் வரும்...?
இந்த அப்ளிகேஷன் மூலம் நமது இதயத்தின் செயல்பாடு எப்படியுள்ளது, இதயம் எந்த நிலையில் இயங்குகிறது, பாதிப்புகள் உள்ளதா, மாரடைப்பு வர எவ்வளவு சதவீதம் சாத்தியக்கூறுகள் உள்ளன. அப்படியே வந்தால் எத்தனை ஆண்டுகளில் மாரடைப்பு வரும், அதிலிருந்து நாம் மீள என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட இதய சம்பந்தமான பல்வேறு தகவல்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற முடியும்.
காரணங்கள்...
இது குறித்து வைத்ய சானே அறக்கட்டளையின் நிறுவனர் ரோகித் சானே கூறுகையில், ‘வயதாவதாலும், நீரிழிவு, எடை குறைதல், சிகரெட் பழக்கம், அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு போன்ற பாதிப்புகளாலும் நமது ரத்த நாளங்களும், இதயமும் பாதிப்படைந்து மாரடைப்பு ஏற்படுகிறது.
பாதிப்புகளைத் தடுக்க முடியும்...
இதை தடுக்க, ஹார்ட் ஹெல்த் மீட்டர் அப்ளிகேஷன் மூலம் நாமே நமது இதய பாதிப்புகளை கண்டறிந்து உடனடி சிகிச்சை மேற்கொண்டு, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்‘ என்றார்.
இலவசம்...
தற்போது இந்த அப்ளிகேஷனை ஆன்ட்ராய்டு மொபைல்களுக்கான கூகுள் பிளேஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும், விரைவில் விண்டோஸ் மொபைல்களுக்கான அப்ளிகேஷனை உருவாக்க உள்ளதாகவும் தானே டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது.