அப்பா காப்பாத்துங்க!...சிறுமியின் கதறலுக்கு மனம் இறங்காத அப்பா- மரணத்துக்கு பின் வைரலாகும் வீடியோ
புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் அளிக்காமல் தடுத்த தந்தையே தனது மரணத்துக்கு காரணம் என்று சிறுமி ஒருவர் பதிவு செய்த கதறல் வீடியோ அவரது மறைவிற்கு பிறகு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விஜயவாடா : 13 வயது சிறுமி தன்னை புற்றுநோயில் இருந்து காப்பாற்ற உதவுமாறு தந்தைக்கு விடுத்த கெஞ்சல் வீடியோ அவரது இறப்பிற்கு பிறகு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்த மாதம்ஷெட்டி சிவகுமாரின் 13 வயது மகள் சாய் ஸ்ரீ எலும்பு மஞ்சை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 8 ஆண்டுகளுக்கு முன்பே சாய் ஸ்ரீயையும அவரது தாயாரையும் விட்டு மாதம் ஷெட்டி விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தந்தை பெங்களூரில் வசிக்க சிறுமி சாய் ஸ்ரீ விஜயவாடாவில் தன்னுடைய தாயாருடன் வசித்து வந்துள்ளார். குழந்தைக்கு எலும்பு மஞ்சை புற்றுநோய் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக சாய்ஸ்ரீ பெயரில் உள்ள வீட்டை விற்று ரூ. 40 லட்சம் பணம் பெற அவரின் தாயார் முடிவு செய்துள்ளார். ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போட்ட மாதம்ஷெட்டி வீட்டை விற்கமுடியாமல் தடையை ஏற்படுத்திவிட்டார். இதனால் சாய் ஸ்ரீ தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதில் " அப்பா நான் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறேன், அம்மா என்னுடைய சிகிச்சைக்காகத் தான் வீட்டை விற்கிறார். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்களே பணத்தை செலுத்து எனது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஒரு வேளை நீங்கள் அப்படி செய்யாவிடில் எனது உயிரிழப்புக்கு நீங்கள் தான் காரணம்" என்று கண்ணீர்விட்டு கதறி அழுதபடியே இருக்கும் அந்தப் பிஞ்சின் கதறல் வீடியோ.
ஆனால் சிறுமியின் வீடியோவிற்கும் மனமிரங்காத கல் நெஞ்சக்கார்ராக அவரது தந்தை இருந்த்தால் இரண்டு தினங்களுக்கு முன்னர் குட்டி தேவதை சாய் ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்ததையடுத்து தந்தையிடம் அவர் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி விஜயவாடா காவல்துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.