கொளுத்தும் கோடை வெயில்.. ஆந்திரா, தெலுங்கானாவில் 432 பேர் பரிதாப சாவு!
ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த சில தினங்களாக வெயிலின் கடுமை அதிகமாக உள்ளது. அனல் காற்று வீசி வருவதால், பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பல பகுதியில் 116 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. கடும் வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக பலர் மயக்கம் அடைந்தனர். தெலுங்கானாவில் உள்ள அதிலாபாத், வாராங்கல், ஐதராபாத், ஹாமம், மகாபூப்நகர், நல்கோல்டா மற்றும் நிசாமாபாத், கரிம்நகர் பகுதிகளில் தொடர்ந்து வெயிலின் உக்கிரம் நீடித்து வருகிறது. இது வரை இந்த இரு மாநிலங்களிலும் வெயிலுக்கு 432 பேர் பலியாகியுள்ளனர்.
வெயிலுக்கு பயந்து மக்கள் வீடுகளில் முடங்கி கிடப்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஹைதராபாத் நகரின் தெருக்களும், கடைவீதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதற்கிடையே இரு மாநிலங்களிலும் இன்னும் 4 நாட்களுக்கு இந்த வெயில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.