கார் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி செய்கிறார் ஹேமமாலினி
மும்பை: கார் விபத்தில் காயமடைந்தோருக்கு நிதியுதவி செய்ய நடிகையும், பாஜக எம்.பியுமான ஹேமமாலினி முடிவு செய்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் தாசா மாவட்டத்தில் தனது மெர்சிடிஸ் காரில் ஹேமமாலினி பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே வந்த இன்னொரு கார் மீது ஹேமாவின் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக பலியானார்.
ஹேமா உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஹேமாவின் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ளதால் ஹேமமாலினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மும்பையில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
அவரது மகள் ஈஷா தியோல் தனது கணவருடன் சேர்ந்து ஹேமாவை விமானித்தில் மும்பைக்கு அழைத்து வந்தார். வீட்டுக்கு வந்து சேர்ந்த பின்னர் வீட்டுக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார் ஈஷா.
அப்போது அவர் கூறுகையில், கார் விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு எனது தாயார் நிதியுதவி செய்வார். ஒரு தலைவர் என்ற அடிப்படையில் இதை அவர் செய்யவில்லை. இயல்பிலேயே அவர் நல்ல மனம் படைத்தவர். ஈர இதயம் கொண்டவர் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், விபத்து நடந்ததுமே எனது தாயாரோ அல்லது நாங்களோ மற்றதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலையில் இருந்தோம். ஆனால் ஒரு அழகான உயிர் இந்த விபத்தில் பலியாகியிருப்பது வருத்தமும், வேதனையும் தருகிறது.
இது மிகவும் மோசமான விபத்து, யாருமே பேசக் கூடிய நிலையில் இல்லை. எதையுமே சிந்திக்கக் கூடிய நிலையில் இல்லை என்றார் ஈஷா.