ரயில்வே அமைச்சரை இந்து கடவுள்கள் மன்னிக்கவே மாட்டங்க... சாபமிடும் உத்தரகாண்ட் காங்.!
டேராடூன்: ரயில்வே பட்ஜெட்டில் 'தேவபூமியான' உத்தரகாண்ட் மாநிலத்தைப் புறக்கணித்த மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை இந்து கடவுள்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கட்சி சாபம்விட்டுள்ளது.
நாடாளுமன்றத்த்தில் ரயில்வே பட்ஜெட்டை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் எந்த ஒரு மாநிலத்துக்கும் எந்த ஒரு புதிய ரயில் அறிவிப்பும் இடம்பெறவில்லை. இது அனைத்து மாநில மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கிஷோர் உபாத்யாயா கூறியுள்ளதாவது:
ரயில்வே பட்ஜெட் முழுவதுமே வாக்குறுதிகளால் நிரம்பியிருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்துக்கு என எந்த ஒரு அறிவிப்புமே இல்லை.
உத்தரகாண்ட் மாநிலம் இந்து கடவுள்களின் 'தேவபூமி'. இந்த மாநிலத்தைப் புறக்கணித்ததற்காக கங்கை தாயும் பகவான் பத்ரிவிஷாலும் மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபுவை மன்னிக்கவே மாட்டார்கள்.
உத்தரகாண்ட் பாரதிய ஜனதாவுக்கு 5 எம்.பி.க்களைக் கொடுத்திருக்கிறது. ஆனால் ஒவ்வொரு நிலையிலுமே உத்தரகாண்ட் மாநிலம் புறக்கணிக்கப்பட்டே வருகிறது.
ரயில்வே பட்ஜெட்டில் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு நிறைய கிடைக்கும் என எதிர்பார்ப்போம். ஆனால் எல்லாமே பொய்யாகிப் போனது. வளர்ச்சியைப் பற்றி தங்களுக்கு அக்கறை எதுவும் இல்லை என்பதை பாரதிய ஜனதா கட்சி மீண்டும் நிரூபித்திருக்கிறது.
ரயில்வே பட்ஜெட்டுக்கு முன்னர் கூட முதல்வர் ஹரீஸ் ராவத், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி அண்டை மாநிலங்களுடனான ரயில்வே திட்டங்கள், சுற்றுலா மேம்பாட்டுக்கான ரயில் திட்டங்கள் குறித்தெல்லாம் விவாதித்தார். ஆனால் உத்தரகாண்ட் மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை ரயில்வே பட்ஜெட்.
இவ்வாறு கிஷோர் உபாத்யாயா கூறினார்.