காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு கோயில்களில் சிலை... இந்து மகாசபை முடிவால் பதற்றம்!
டெல்லி : மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று, அவரைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவின் சிலை கோயில்களில் நிறுவப்படும் என்ற இந்து மகாசபை அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 67வது நினைவு தினம், தியாகிகள் தினமாக இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப் படுகிறது.
முன்னதாக, மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுநாம் கோட்சேவுக்கு நாடு முழுவதும் சிலைகள் அமைக்கப் படும் என அகில இந்திய இந்து மகா சபை அறிவித்திருந்தது. அதேபோல், உத்தரப்பிரதேசத்தில் சித்தாபூர் மாவட்டத்தில் கோட்சேவுக்கு கோயில் அமைக்கவும், மீரட்டில் சிலை நிறுவவும் இடம் தேர்வு செய்யப்பட்டு, பூமி பூஜை கூட நடத்தப்பட்டது.
கோட்சேவுக்கு சிலை வைப்பதற்கும், கோயில் கட்டுவதற்கும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் வலுத்தன. அதனைத் தொடர்ந்து இந்து மகாசபை நிர்வாகிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு கோயில் மற்றும் சிலை அமைக்கப் பட இருந்த இடங்களுக்கு சீல் வைத்த உத்திரப்பிரதேச அரசு, அங்கு 144 தடை உத்தரவை அமல் படுத்தியது.
இந்தச் சூழலில், காந்தியின் நினைவு தினமான இன்று நாதுராம் கோட்சேவின் சிலையை கோயில்களில் நிறுவ இருப்பதாக இந்து மகாசபை அறிவித்துள்ளது. இதற்கென ஜெய்ப்பூரில் ரகசியமாக 500 சிலைகள் உருவாக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்து மகாசபையின் இந்த நடவடிக்கைக்கு கோயில் நிர்வாகிகளும், சாதுக்களும் ரகசிய ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், கோட்சேவின் சிலை மற்ற இந்துக் கடவுள்களுக்கு நிகராக அமைக்கப்படாது என்று இந்து மகாசபை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்து மகாசபையின் இந்த அறிவிப்பால், காந்தியவாதிகள் மட்டுமின்றி பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.