கார் விபத்து: சல்மான் கான் லைசென்ஸ் குறித்த வழக்கு – மார்ச் 3ம் தேதி தீர்ப்பு
மும்பை: கடந்த 2002 ஆம் ஆண்டில் நடிகர் சல்மான்கானின் கார் மோதி ஒருவர் பலியான விபத்து வழக்கில் அவருடைய கார் லைசென்ஸ் குறித்த அரசுத்தரப்பு மனுவின் மீதான தீர்ப்பு வருகின்ற 3 ஆம் தேதி வழங்கப்படும் என்று மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் சல்மான்கான் கடந்த 2002 ஆம் ஆண்டு கார் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் மும்பை நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ‘‘நடிகர் சல்மான் கான் விபத்தை ஏற்படுத்திய போது அவரிடம் கார் ஓட்டுனர் உரிமம் இல்லை. 2004 ஆம் ஆண்டு தான் அவர் ஓட்டுனர் உரிமம் பெற்றார்.
ஆனால், இதை சல்மான்கான் மறுப்பதால் விபத்தின் போது ஓட்டுனர் உரிமம் வைத்திருந்ததை அவர் நிரூபிக்க வேண்டும். இதற்கு உரிய ஆவணங்களை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டு உள்ளது.
இதற்கு சல்மான் கான் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். விபத்தின் போது சல்மான் கானிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருந்திருந்தால் அதை அரசு தரப்பு தான் நிரூபிக்க வேண்டும்.
சல்மான் கானை நிரூபிக்க கூறுவது சட்டவிரோதமானது என்று வாதிட்டார். இதைத் தொடர்ந்து ஓட்டுனர் உரிமம் தொடர்பான அரசு வழக்கறிஞர் மனு மீது வருகிற 3 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.