காஷ்மீர் எல்லையில் ராணுவம் அதிரடி என்கவுண்டர்.. ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி சுட்டுக்கொலை!
ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்துடன் நடந்த என்கவுண்டரில், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி சப்சர் அகமது பட் சுட்டுக்கொல்லப்பட்டார். அவனுடன் மேலும் ஒரு தீவிரவாதியும் கொல்லப்பட்டான்.
காஷ்மீர் எல்லையின், ட்ரால் பகுதியில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. தீவிரவாதிகள் வீடு ஒன்றில் தங்கியிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, ராணுவ வீரர்கள் அந்த வீட்டை முற்றுகையிட்டனர். தீவிரவாதிகளை சரணடையுமாறு கேட்டுக்கொண்டது ராணுவம். ஆனால் தீவிரவாதிகளோ வீரர்களை நோக்கி, திடீரென துப்பாக்கி சூடு நடத்த ஆரம்பித்தனர்.
இதையடுத்து பதிலுக்கு இந்திய ராணுவமும் துப்பாக்கி சூடு நடத்தி 2 தீவிரவாதிகளை வீழ்த்தியது. மூன்றாவது ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். தொடர்ந்து ராணுவம் அப்பகுதியில் தேடுதல் வேட்டை டத்தி வருகிறது.
புர்கான் வானியின் அண்ணன் காலித் கொல்லப்பட்ட பிறகு, 2015ம் ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் சேர்ந்த சப்சர் அகமது பட், கடந்த ஆண்டு ஜூலையில் புர்கான் வானி கொல்லப்பட்ட பிறகு அந்த தீவிரவாத அமைப்பின் காஷ்மீர் பிராந்திய தளபதியாக செயல்பட்டவனாகும். எனவே அந்த அமைப்பின் தளபதிகள் அடுத்தடுத்து ஒடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.