2022ல் 'புதிய இந்தியா' பிறக்கும்.. அதில் தீவிரவாதம் இருக்காது.. ராஜ்நாத்சிங் உறுதி!
2022ம் ஆண்டிற்குள் இந்தியாவில் தீவிரவாதம், நக்சல் மற்றும் காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதியளித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் பிரிவினைவாத விவகாரம், தீவிரவாதம் மற்றும் நக்சல் தாக்குதல்களுக்கு 2022க்குள் தீர்வு காணப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
'புதிய இந்தியா' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்த அரசு நாட்டிற்கு மிகப்பெரும் சவால் விடும் விஷயங்களுக்குத் தீர்வு காண உறுதியேற்றள்ளது. இந்தியாவில் தீவிரவாதம், நக்சல் தாக்குதல், காஷ்மீர் பிரிவினைவாத பிரச்னை சவால் விடுக்கும் விஷயங்கள். இது குறித்து அதினம் சொல்லத் தேவையில்லை.
ஆனால் நான் உறுதியாகச் சொல்வேன் 2022க்குள் இவற்றிற்கு தீர்வு காணப்படும். 'புதிய இந்தியா'வை உருவாக்க நாம் உறுதியேற்போம். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் இதற்காக ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இலக்கை நோக்கி பயணிப்போம்
உறுதியேற்போம் செயல்படுவோம் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். இதே போன்று இந்தியாவை தூய்மை நாடாகவும், ஏழ்மை மற்றும் ஊழலற்ற நாடாகவும் மாற்ற வேண்டும். பிரிவினைவாதம், சாதிய வேறுபாடுகள், தீவிரவாதம் இல்லாத நாட்டை உருவாக்குவதே நமது கடமை.
புதிய இந்தியாவை உருவாக்குவோம்
வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு 1942ல் உறுதியேற்று 1947ம் ஆண்டு நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. இதே போன்று நம்மால் முடியாதா 2017ல் புதிய இந்தியாவை உருவாக்க உறுதியேற்று 2022ல் அதனை நிறைவேற்றுவோம்.
ராஜ்நாத்சிங் உறுதி
இதே போன்று வடகிழக்கு மாநிலங்களில் 5 தலைமுறைகளாக நீடிக்கும் உள்நாட்டு கலவரங்களுக்கும் தீர்வு எட்டப்படும். பிரச்னைகளுக்கு தீர்வு காணும் இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும், என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
எல்லை மூடல் விவகாரம்
கடந்த டிசம்பர் மாதம் இந்தியா வங்கதேசம் இடையிலான 223.7 கிலோ மீட்டர் தொலைவுள்ள எல்லைப் பகுதி மூடப்படும் என்று ராஜ்நாத்சிங் கூறியிருந்தார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டிற்குள் இதற்கான பணிகள் முடியும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.