காற்றில் பறக்கும் டெல்லி மானம்- ஆப்கானிஸ்தான் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற மருத்துவமனை ஊழியர்
டெல்லி: டெல்லியில் ஆப்கானிஸ்தான் பெண் ஒருவர் மருத்துவமனை ஊழியரால் பலாத்காரம் செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக நோயுற்ற தனது தாய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அழைத்துவந்த பெண்ணை இங்குள்ள தனியார் மருத்துவமனை ஊழியர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அமைந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து நோயுற்ற தனது தாய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லிக்கு அழைத்து வந்த அந்தப் பெண், சாக்கெட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தார். அவருக்கு துணையாக தனது தங்கையுடன் அருகில் இருந்து கவனித்து வந்தார்.
கடந்த 24 ஆம் தேதி அதிகாலை தாயாரின் கட்டிலின் அருகே தரையில் படுத்திருந்த அந்தப் பெண்ணை அதே மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்யும் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்றார். உறக்கத்தில் இருந்து விடுபட்ட அந்தப் பெண் கூச்சலிடவே அந்த நபர் தப்பியோட தொடங்கினார்.
தனது தங்கையுடன் சேர்ந்து அந்த நபரை பிடித்த ஆப்கானிஸ்தான் பெண்ணுடன் அந்த கொடுமைக்காரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சத்தம் கேட்டு விரைந்துவந்த இதர ஊழியர்கள் அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து, பிடிபட்ட அமர் சிங் என்ற அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த சாக்கெட் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.