வருமான வரித்துறை நடவடிக்கையால் உங்கள் பான்கார்டு ரத்தாகியுள்ளதா? கண்டுபிடிக்க இதுதான் வழி
டெல்லி: இந்தியாவில் சுமார் 11 லட்சம் போலியான பான் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் மத்திய இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார் இதை உறுதி செய்தார்.
இந்தியாவில் போலியான மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை ஒருவர் வைத்திருப்பது போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு, 11,44,211 பான் அட்டைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ராஜ்யசபாவில் சந்தோஷ் கங்க்வார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டிருந்தார்.
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருக்கக் கூடாது என்பது விதிமுறை. ஒருவேளை அவ்வாறு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் வருமான வரிச் சட்டம் 272பியின் படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகள் வழங்கப்பட்டிருந்தால், அதனை அவரே அரசிடம் திருப்பி அளித்திட வேண்டும்.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது இப்படி போலிகளை கண்டறியத்தான். இம்மாத இறுதிக்குள் இதை செய்ய வேண்டும். இந்த நிலையில், போலி என்று கருதி உங்கள் பான் எண்ணையும் தவறுதலாக வருமான வரித்துறை ரத்து செய்துவிட்டதா இல்லையா என்பதை அறிய ஒரு வழி உள்ளது.
http://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று அதை அறியலாம். அந்த வெப்சைட்டில் services என்ற பிரிவில் 'Know Your PAN' என்பதை கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் தகவல்களை அளிக்க வேண்டும்.
பான் அட்டை வாங்குவதற்காக நீங்கள் கொடுத்த செல்போன் எண்ணை இதில் பதிவு செய்ய வேண்டும். அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, சமர்ப்பித்ததும் செய்ததும், உங்கள் செல்பேன் எண்ணுக்கு ஓடிபி பாஸ்வேர்ட் எண் அனுப்பப்படும். அதையும் பதிவு செய்த பிறகு வேலிடேட் என்ற பட்டனை கிளிக் செய்யவும். இறுதியில், உங்கள் பான் அட்டையின் எண் மற்றும் அதன் அருகே ஆக்டிப் அல்லது நாட் ஆக்டிவ் என்று பதிவு செய்யப்பட்டிருக்கும். அதைக் கொண்டு உங்கள் பான் அட்டையின் நிலையை அறிந்து கொள்ளலாம்.