மோடி பெயர் பொறித்த உடை ரூ.10 லட்சமாம்!: சமூக வலைதளங்களில் கிண்டல்
டெல்லி: ஒபாமாவுடனான சந்திப்பின்போது, பிரதமர் மோடி ரூ.10 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட ஆடை அணிந்திருந்ததாக சமூக வலைத் தளங்களில் தகவல் பரவியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆடை அணிவதில் மோடி செலுத்தும் கவனத்தை வெளிநாட்டு ஊடகங்களும் பாராட்டுவதுண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒபாமாவை மோடி சந்திக்கும் போது, இளஞ்சிவப்பில் மெல்லிய கோடுகள் கொண்ட சூட் அணிந்திருந்தார்.
பிரதமரின் படங்களை பெரிதுபடுத்தி பார்க்கும்போது, இளஞ்சிவப்பு கோடுகள் முழுவதும் ‘நரேந்திர தாமோதர்தாஸ் மோடி' என்று எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன.
ஒபாமாவை டெல்லி விமான நிலையத்தில் குர்தா மற்றும் சால்வை அணிந்து வரவேற்ற மோடி, பின்னர் ஒபாமாவை இரண்டாவது முறையாக சந்திக்கும்போது இந்த ஆடை அணிந்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு விருந்தின்போது மோடியிடம், ஒபாமா தானும் குர்தா அணிவது குறித்து யோசிப்பதாக கூறி கலகலப் பூட்டினார்.
மோடியின் உடை
அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தபோது, ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடி, ‘‘பந்த் கலா'' எனும் கருப்பு நிறத்தினாலான கோட்-சூட் அணிந்திருந்தார்.
தங்க சரிகையில் பெயர்
அந்த ‘கோட்'டில் தங்க நிறத்தில் கோடு, கோடு போல செய்யப்பட்ட டிசைனில்" நரேந்திர தாமோதர்தாஸ் மோடி'' எனும் மோடியின் முழுப் பெயர் வடிவமைக்கப்பட்டிருந்தது. அன்று இது பற்றி யாருக்கும் தெரியவில்லை.
ரூ.பத்து லட்சம்
ஆனால் மறுநாள் பத்திரிகைகளில் மோடியின் கோட் வாசகம் பெரிதுபடுத்தி காட்டப்பட்ட போதுதான் பிரதமர் மோடிக்காகவே பிரத்யேகமாக அந்த உடை தயாரிக்கப்பட்ட தகவல் தெரிய வந்தது. அந்த உடையின் விலை ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
துணியின் விலை
மோடி பெயர் பொறித்த அந்த உடை எங்கு தயாரிக்கப்பட்டது என்று உறுதியாகத் தெரியவில்லை. என்றாலும் இங்கிலாந்தில் உள்ள ஷெர்ரி, ஹாலந்து ஆகிய இரு நிறுவனங்கள்தான் அந்த கோட்- சூட் தயாரிப்புக்கான துணி இழைகளை கொடுத்து இருக்கலாம் என்று தெரிகிறது. துணிக்கான விலை மட்டும் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆடை தைக்க ரூ.5லட்சம்
பிரபல தையல் கலைஞர் டாம் ஜேம்ஸ் இந்த உடையை வடிவமைத்து தைத்து இருப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிறப்பு உடை தைக்க ரூ.5 லட்சத்துக்கு மேல் வாங்குவார்.
ரூ.10 லட்சம்
இதன் அடிப்படையில் பார்த்தால் பிரதமர் மோடிக்காக தைக்கப்பட்ட கோட்-சூட் விலை குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என்று இங்கிலாந்தில் வெளியாகும் ‘‘லண்டன் ஸ்டாண் டர்டு'' இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்பெஷல் வடிவமைப்பு
பிரபல தையல் கலைஞர் டாம் ஜேம்ஸ் இதுபற்றி கூறுகையில், ‘‘இது போன்ற ஆடைகளை எங்களால் மட்டுமே வடிவமைக்க முடியும்'' என்றார். ஆனால் துணி இழைகளை வழங்கிய லண்டன் நிறுவனங்கள் இந்த தகவலை உறுதிபடுத்த மறுத்துவிட்டன.
வலைஞர்கள் கலாய்ப்பு
இந்த நிலையில் பிரதமர் மோடி, ஒபாமாவை சந்தித்த போது ரூ.10 லட்சம் மதிப்புள்ள பிரத்யேக உடையை அணிந்தது கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை எதிர்த்து வலைப் பதிவர்கள் காரசாரமாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அலங்கார பிரியர்
பிரதமர் மோடி தன்னை அலங்கரித்து கொள்வதை கைவிட வேண்டும் என்று பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஆனால் மோடி ஆதரவாளர்கள், ‘‘இது தனி நபர் சுதந்திரத்தில் தலையிடுவது போல உள்ளது'' என்று பதிலளித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்கள்
இந்த குளோசப் படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவின. கூடவே கிண்டல் செய்தும் பதிவுகள் வெளியாகின. காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மோடியின் பெயர் பொறித்த உடைக்கு எதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனால் கடந்த இரு நாட்களாக வலைத் தளங்களில் மோடியின் புதிய சூட் பிரச்னை தீவிரமாக உள்ளது.
யாரும் திருட மாட்டாங்கப்பா
"மோடி தனது ஆடையை யாராவது திருடி விடுவார்கள் என்று பயப் படுகிறாரா?" என்றும் "மோடி சண்டைக்குச் செல்வதாக அவரது ஆடை வடிவமைப்பாளர்கள் கருதி விட்டனரா?" என்றெல்லாம் பதிவுகள் வெளியாகின.
உடை மாற்ற போயிருப்பார்
வெளிநாட்டு அதிபர் காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது நமது பிரதமர் உடைமாற்றப் போய்விட்டார்!
எளிமை என்பது 10லட்ச ரூபாய்க்கு தங்க ஜரிகையால் தன் பெயர் எழுதிய சூட் அணிவது. அதுவும் ஒரு நாளைக்கு மூன்று! யார் வீட்டுக் காசு ?! #பிரதானசேவகர் என்றும் பதிவிட்டுள்ளனர்.
எகிப்து அதிபர்
ஆடையில் பெயர் பொறித்துக்கொண்ட முதல் தலைவர் அல்ல மோடி. இதற்கு முன் முன்னாள் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் தனது ஆடை கோடுகளில் தனது பெயரை பொறித்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.