ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தால் ஆன்லைன் ஷாப்பிங் எப்படி இருக்கும்?
ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலானால் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்கப்படும் பொருட்களின் விலை என்ன ஆகும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
டெல்லி: மத்திய அரசு கொண்டு வரவுள்ள ஜி.எஸ்.டி.யால் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் விற்கப்படும் பொருட்களின் விலைகள் என்ன ஆகும் என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விடுதலைக்குப் பிறகு இந்தியாவில் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாகக் கருதப்படும் சரக்குகள் மற்றும் சேவை வரி விதிப்பு முறை நாடு முழுவதும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலாக இருக்கிறது.
நடைமுறைக்கு ஜிஎஸ்டி வரவுள்ள நிலையில் அதன் மீதான அச்சம் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலாக இருப்பதால் இணையதள வணிக நிறுவனங்கள், பொருட்களை விற்றுத் தீர்ப்பதற்காக 25 சதவீதம் முதல் 90 சதவீதம் வரையிலான சலுகைகளை அறிவித்து வருகின்றன.
விலை உயர வாய்ப்பு
இந்த நிலையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்தால் ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களின் விலை உயர வாய்ப்புகள் இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். இதனால் ஆன்லைன் ஷாப்பிங் கொஞ்சம் டல்லடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆன் லைன் விற்பனைக்கு 1% வரி
ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இதுவரை எந்தவிதமான வரிகளையும் வசூலிப்பதில்லை. ஆனால், ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் ஆன்லைன் மூலம் விற்கப்படும் பொருட்களுக்கு ஒரு சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலில் தள்ளிவைப்பு அடுத்து அமல்
இந்த நடைமுறை அமல்படுத்தப்படுவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நடைமுறை அமலாகும்போது ஆன்லைன் மூலம் வாங்கும் பொருட்களின் விலை உயரும் என்பதில் மாற்றமில்லை.
ஸ்பீடு டெலிவரி
அதேநேரம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலானால் ஆன்லைனில் நீங்கள் வாங்கும் பொருட்கள் விரைவாக உங்கள் வீட்டை வந்தடையும். ஏனெனில், இந்த புதிய வரிவிதிப்பின் கீழ் மாநிலத்துக்கு மாநிலம் வரிவிதிப்பு வேறுபடாது.
காலதாமதம் தவிர்க்கப்படும்
பொருட்களை விற்பவர்கள் மாநில வரி விதிப்புக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. இதனால் காலதாமதமின்றி பொருட்கள் விரைவாக டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஃபர்களுக்கு ஆப்பு
ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் மெகா ஆஃபர்கள் மற்றும் இலவச அறிவிப்புகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்பதால், அதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தயக்கம் காட்டலாம்.
இன்னும் தெளிவான விளக்கங்கள் இல்லை
அமேசான் மற்றும் இ-பே போன்ற நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு கரன்சிகளையே ஆன்லைன் ஷாப்பிங் பணபரிமாற்றத்தின் போது பயன்படுத்துகின்றன. இந்த நடைமுறைக்கு விதிக்கப்படும் வரி விதிப்பு குறித்து அரசிடம் தெளிவான விளக்கங்கள் இல்லை.