காசு தர முடியாது என கைவிரித்த ஐஎஸ்ஐஎஸ்.. மனைவியரை விட்டு நிதி சேகரிக்கும் தீவிரவாதிகள்
டெல்லி: தீவிரவாத இயக்கங்களில் இப்போது பெண்களும் பெருகி வருகின்றனர். அங்கு அவர்களின் பங்கு குறித்து ஏற்கனவே பல்வேறு செய்திகள் வந்து விட்டன. இந்த நிலையில் தங்களது இயக்கத்திற்கு நிதி சேகரிக்கும் வேலைக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களது மனைவியரைப் பயன்படுத்தும் விவரம் தெரிய வந்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் பெண்களை செக்ஸ் அடிமைகளாகவும், தீவிரவாதிகளுக்குப் பிள்ளை பெற்றுக் கொடுப்பவர்களாகவும்தான் வைத்துள்ளதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ஐஎஸ் அமைப்பினர் தங்களது இயக்கத்தில் உள்ள தீவிரவாதிகளின் மனைவியரை, நிதி வசூல் செய்யப் பயன்படுத்துவதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.
பணத்திற்குப் பஞ்சமில்லைதான்
இப்போதைய தேதியில் உலகிலேயே மிகப் பெரிய பணக்கார தீவிரவாத அமைப்பு ஐஎஸ்ஐஎஸ்தான். ஈராக்கிலும், சிரியாவிலும் இவர்கள் வசம் பல எண்ணெய்க் கிணறுகள் உள்ளன. மேலும் பல்வேறு இடங்களிலிருந்து பறிமுதல் செய்த பணம், நகை என கணக்கே இல்லாமல் பொன்னும் பொருளும் இவர்களிடம் குவிந்து கிடக்கிறது.
வெளிநாட்டினருக்குப் புது உத்தரவு
அதேசமயம், வெளிநாடுகளில் உள்ள தங்களது கிளைகளுக்கு இவர்கள் பணம் அனுப்புவதில்லையாம். அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குத் தேவையான நிதியை தாங்களே திரட்டிக் கொள்ள வேண்டுமாம்.
நீங்களே பணம் போட்டு "கம்பெனி"யை நடத்துங்கப்பா
வெளிநாடுகளில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் தங்களது தேவைகளுக்கு தாங்களே நிதி சேகரித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம். மேலும் ஐஎஸ் இயக்கத்தில் உள்ளவர்கள் தங்களின் மனைவியரையும் இதில் ஈடுபடுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
எங்க கிட்ட வராதீங்க
எங்களுக்கே செலவு நிறைய உள்ளது. ஈராக், சிரியாவில் எங்களுக்கு நிறைய செலவுகள் உள்ளன. எனவே பிற நாடுகளுக்குப் பணம் அனுப்ப முடியாத நிலை உள்ளது. எனவே உங்களுக்குத் தேவையானதை நீங்களே திரட்டிக் கொள்ள வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
பெண்களுக்குப் புது வேலை
இதையடுத்து நிதி திரட்டுவது உள்ளிட்டவற்றில் தங்களது இயக்கத்தில் உள்ளவர்களின் மனைவியரையும் தற்போது ஈடுபடுத்த ஆரம்பித்துள்ளனராம். பாகிஸ்தானில், பணக்காரப் பெண்களிடம் இந்தப் பெண்கள் சென்று பணம் கேட்கின்றனராம். மேலும் பெய்த் அகாடமி என்ற பெயரில் அங்கு ஒரு அகாடமியை உருவாக்கியுள்ளனராம். அந்த அகாடமிக்கு நன்கொடை கேட்டு அதை ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துகின்றனராம்.
பணத்தைப் பெற்று கணவரிடம் கொடுக்கிறார்கள்
இப்படி பெண்கள் பல்வறு வழிகளில் பணம் திரட்டி அதை தங்களது கணவர்களிடம் கொடுக்கிறார்களாம். இந்தப் பணம் பின்னர் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறதாம்.
இந்தியாவில்
இருப்பினும் இந்தியாவில் இதுபோல நடக்கிறதா என்று தெரியவில்லை. இதுவரை அப்படி நடப்பதாக தெரியவில்லை என்று உளவுத்துறை கூறுகிறது. இருப்பினும் முன்பு சிமி அமைப்பு ஷாஹீன் போர்ஸ் என்ற பெயரில் பெண்கள் பிரிவை வைத்திருந்தது. அவர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர் என்பதால் ஐஎஸ் சார்பில் இப்போது பெண்கள் நிதி திரட்டுகின்றனரா என்பதை கண்காணித்து வருவதாக உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.