25 அடி ஆழ சியாச்சின் பனியில்.. இப்படித்தான் 6 நாட்கள் தாக்குப் பிடித்தார் வீரர் ஹனுமந்தப்பா
டெல்லி: சியாச்சின் போர் முனையில் 25 அடி ஆழத்தில் பனியில் சிக்கி 6 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட வீரர் ஹனுமந்தப்பா எப்படி அத்தனை நாட்கள் தாக்குப்பிடித்திருப்பார் என்பது தெரிய வந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உலகின் மிக உயரமான போர் முனையான சியாச்சினில் கடந்த வாரம் புதன்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் மெட்ராஸ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த 4 தமிழர்கள் உள்பட 10 பேர் சிக்கினர். அதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வீரர் ஹனுமந்தப்பா 6 நாட்களுக்குப் பின்னர் 25 அடி ஆழ பனியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.
டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
பிரார்த்தனை
ஹனுமந்தப்பா உடல் நலம் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று அவரது குடும்பத்தார் மட்டும் அல்ல நாட்டு மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி, ராணுவ தளபதி தல்பிர் சிங் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று ஹனுமந்தப்பாவை பார்த்துள்ளனர்.
ஹனுமந்தப்பா
மற்ற 9 வீரர்கள் இறந்துவிட்டபோது ஹனுமந்தப்பா மட்டும் எப்படி 6 நாட்கள் பனியில் இருந்தார் என்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. பனிச்சரிவு ஏற்பட்டால் சரியும் பனியுடன் நீந்துமாறு ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹனுமந்தப்பாவோ 25 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
குழந்தை போன்று
பனிச்சரிவில் நீந்த முடியாமல் சிக்கிக் கொண்டால் உதவி கிடைக்கும் வரை கருவில் இருக்கும் குழந்தை போன்று கை, கால்களை மடக்கி மூச்சு விட வசதியாக வாயின் அருகே லேசாக ஏர் பாக்கெட்டை தோண்டி வைக்குமாறு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஹனுமந்தப்பா விஷயத்தில் அவர் புதையுண்ட இடத்தில் இயற்கையாகவே ஏர் பாக்கெட் இருந்துள்ளது.
சிறுதுவாரம் வழியாக...
அதாவது அந்த ஆழத்திலும் சிறு துவாரம் இருந்து அது வழியாக காற்று வந்துள்ளது. அதனால் தான் ஹனுமந்தப்பாவால் 6 நாட்கள் உயிருடன் இருக்க முடிந்தது என்கின்றன மருத்துவமனை வட்டாரங்கள்.