'அம்மா'வுக்கே முடியலையே: சல்மானுக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் ஜாமீன் கிடைத்தது?
மும்பை: காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட 3 மணிநேரத்திற்குள் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன் எப்படி கிடைத்தது என்று பலரும் வியக்கிறார்கள்.
2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பை பந்த்ரா பகுதியில் குடிபோதையில் காரை ஓட்டி சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றியதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர். 13 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
சல்மான் கான் குற்றவாளி என்று அறிவித்த மும்பை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி டி.டபுள்யூ. தேஷ்பாண்டே அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பு வழங்கிய 3 மணிநேரத்திற்குள் மும்பை உயர் நீதிமன்றத்தில் சல்மான் இடைக்கால ஜாமீன் பெற்று வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அது எப்படி தீர்ப்பு வழங்கிய வேகத்தில் சல்மானால் ஜாமீன் பெற முடிந்தது என்று பலரும் வியக்கிறார்கள். செய்த பாவத்திற்கு சல்மான் சிறைக்கு செல்ல வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். சல்மான் வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட உடன் இந்தியாவின் காஸ்ட்லியான வழக்கறிஞரான ஹரிஷ் சால்வே மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி சல்மானுக்கு ஜாமீன் பெற்றுத் தந்தார்.
சல்மானுக்கு தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளனர். அதனால் தான் தண்டனை கிடைத்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக முன்கூட்டியே சிந்தித்து செயல்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு நகலை அளிக்க இரண்டு நாட்களாவது ஆகும். நகல் இல்லாமல் ஜாமீன் அளிக்க முடியாது என்பதால் உயர் நீதிமன்றம் 2 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.