என்கவுண்ட்டருக்கு பயந்து 'சிக்கிய' ஐ.எஸ்.ஐ.எஸ்சுக்கு ஆள்பிடித்த பெங்களூர் 'ட்விட்டர் ' இளைஞர்!
பெங்களூரு: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் பிடித்தனுப்பிய பெங்களூரு இளைஞர், என்கவுண்ட்டருக்கு பயந்து போலீசிடம் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரிலிருந்து @shammiwitness என்ற பெயரில் செயல்பட்டுவந்த டிவிட்டர் அக்கவுண்ட் மூலமாக பல வாலிபர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைய மூளைச் சலவை செய்யப்பட்டதை இங்கிலாந்தின் சேனல்-4 தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பியது. இதையடுத்து இந்திய உளவு அமைப்புகள் பெங்களூரு போலீசாரிடம் இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டன.
இதையடுத்து அந்த அக்கவுண்ட் வைத்திருந்த மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ், சேனல்-4க்கு அளித்த பேட்டியில், தான் சரணடைய விரும்புவதாக தெரிவித்திருந்தார். இதன் மூலம் என்கவுண்டரில் தன்னை கொன்றுவிடக்கூடாது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்திக் கொண்டு தனது உயிருக்கு உத்தரவாதம் தேடிக்கொண்டார் மேதி மஸ்ரூர்.
இதனிடையே பெங்களூரு போலீசார், மஸ்ரூர் இருக்கும் இடம் வடக்கு பெங்களூருவிலுள்ள ஜாலஹள்ளியிலுள்ளது என்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து ஜாலஹள்ளியிலுள்ள மஸ்ரூர் அப்பார்ட்மென்டுக்குள் நேற்றிரவு அதிரடியாக நுழைந்த போலீசார், அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேதி மஸ்ரூரிடமிருந்து வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. அதை வைத்து பெயரை உறுதி செய்துள்ளனர் போலீசார். 25 வயதான அந்த வாலிபர் 2012 முதல் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். பல பகுதிகளில் கிளை வைத்துள்ள உணவு நிறுவனம் ஒன்றில்தான் அவர் முக்கிய பதவியில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
சேனல்-4 செய்தி சேனல் மேதி குறித்து செய்தி வெளியிடுவதற்கு மூன்று நாட்கள் முன்புதான் பெங்களூருவுக்கு வந்து தனது மகனை சந்தித்து விட்டு சென்றுள்ளார். ஆனால் அவரது தந்தை கொல்கத்தாவில்தான் உள்ளார்.
சேனல் 4க்கு அளித்த பேட்டியில் டிவிட்டர் தன்னுடையதுதான் என்றும் ஐஎஸ்ஐஎஸ் குறித்து தான் டிவிட்டரில் எதுவும் தெரிவித்திருக்கவில்லை என்றும் கூறியிருந்த மேதி, போலீசாரிடம் வேறுமாதிரி வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசாரிடம் அதுபோன்ற டிவிட்டரை தான் ஹேண்டில் செய்தது கிடையாது என்றும், அந்த டிவிட்டர் அக்கவுண்ட்டே தனது கிடையாது என்றும் போலீசாரிடம் மேதி கூறியுள்ளார். இதனால் போலீசாருக்கும், உளவுத்துறைக்கும் சந்தேகம் வலுத்துள்ளது.