'நண்பேன்டா'வான அல்கொய்தா- ஹூஜி... வடகிழக்கு மாநிலங்களை ரணகளமாக்க சதி- உளவுத்துறை எச்சரிக்கை!!
டெல்லி: "இந்திய துணைக் கண்ட அல்கொய்தா" இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் 2 பேரை வங்கதேசம் கைது செய்துள்ளது மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த இருவரில் மவுலானா ஜாஃபர் ஆலிம், இந்திய துணைக் கண்டத்து அல்கொய்தாவின் வங்கதேசத்துக்கான தலைவர். மற்றொரு நபரான மனியுல் இஸ்லாம், ஹர்கத்-உல்-ஜிஹாதி இஸ்லாமி என்ற ஹூஜி இயக்கத்தின் முன்னாள் தலைவர். ஹூஜி மற்றும் இந்திய துணைக் கண்ட அல்கொய்தா ஆகிய 2 இயக்கங்களும் கை கோர்த்திருப்பது என்பது இந்தியாவுக்கு நல்ல சேதி அல்ல என்கின்றனர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்..
ஹூஜி இயக்கம் என்பது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.வால் உருவாக்கப்பட்டது. லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் சகோதர அமைப்புதான் ஹூஜி..
ஹூஜியின் பின்னணி
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதுதான் ஹூஜி அமைப்பின் முதன்மை இலக்கு. இந்த ஹூஜி அமைப்பு தெலுங்கானாவின் ஹைதராபாத்தில்தான் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக இருந்தவர் ஷாகித் பிலால். மூசாரம்பாக் என்ற பகுதியில் இருந்து அவர் இயங்கி வந்தார். இளைஞர்களிடத்தில் தம்மை ஒரு கடவுள் போல வெளிப்படுத்திக் கொண்டவர்.. ஹைதராபாத்தின் லும்பினி பார்க் மற்றும் கோகுல் சாட்ஸ் பகுதியில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவை விட்டு வெளியேறினார் பிலால். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கும் பிலால் கட்டுப்படாதவராக இருந்ததால் என்கவுண்ட்டர் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அல்கொய்தாவுடன் கரம்..
அதன் பின்னர் ஹூஜி அமைப்பை முழுமையாக ஐ.எஸ்.ஐ. தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது. தற்போது இந்த ஹூஜியும் இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தா இயக்கமும் தற்போது இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த இரு இயக்கங்களும் இணைந்து சிலீப்பர் செல்களை உருவாக்கி மேற்கு வங்கம், பீகார், மத்திய பிரதேசம், வடகிழக்கு மற்றும் தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரங்களில் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
வடகிழக்கு தீவிரவாத அமைப்புகளுடன்...
இதே ஹூஜி அமைப்புதான் அஸ்ஸாம் தனிநாடு கோருகிற உல்பா அமைப்புடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறது. இதனால்தான் அஸ்ஸாம் முதல்வர், தங்களது மாநிலத்தில் அல்கொய்தா காலூன்றி வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார். வடகிழக்கு மாநில தீவிரவாத குழுக்களுடன் அல்கொய்தா- ஹூஜி அமைப்பு இணைந்து செயல்படுவதையே இது வெளிப்படுத்தி இருந்தது.
வங்கதேசத்து வேட்டை
தற்போது ஹூஜி மற்றும் இந்திய துணைக் கண்ட அல்கொய்தா இயக்கங்கள் மீது வங்கதேசம் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தற்போது இந்த இருவரை மட்டுமின்றி மேலும் பல முக்கிய தீவிரவாதிகளையும் கைது செய்ய வங்கதேசம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த இரு தீவிரவாதிகளை கைது செய்த போது பெருமளவிலான வெடிபொருட்கள், வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், ஆயுதங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. வங்கதேசத்தின் இந்த நடவடிக்கைகள் இந்தியாவுக்கு தற்காலிக ஆறுதலைத் தந்தாலும் ஒரு நீண்டகால 'தலைவலி' காத்திருக்கிறது என்பதையே உளவு அமைப்புகளும் பாதுகாப்புத் துறை வல்லுநர்களும் எச்சரிக்கையோடு சுட்டிக் காட்டுகின்றனர்.