20 தமிழர்கள் கொல்லப்பட்டது சட்டவிரோதமானது: தேசிய மனித உரிமை கமிஷன்
ஹைதராபாத்: 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொலை செய்தது சட்டவிரோதமானது என தேசிய மனித உரிமை கமிஷன் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை அம்மாநில போலீசார் சுட்டுக் கொலை செய்தனர். இந்த சம்பவத்தை தேசிய மனித உரிமை கமிஷன் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இதையடுத்து என்கவுன்ட்டரில் இருந்து தப்பிய 2 பேர் கடந்த 13ம் தேதி டெல்லியில் தேசிய மனித உரிமை கமிஷன் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து மேலும் ஒருவர் கடந்த 15ம் தேதி புதுச்சேரியில் வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில் தமிழர்கள் படுகொலை குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை கமிஷன் குழுவினர் நேற்று ஹைதராபாத் வந்து தங்களின் விசாரணையை துவங்கினர். 20 பேர் படுகொலை குறித்து நீதி விசாரணைக்கு ஏன் உத்தரவிடவில்லை என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தமிழர்கள் கொல்லப்பட்டது சட்டவிரோதமானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் கூறுகையில்,
3 பேர் அளித்த வாக்குமூலத்தில் இருந்து 20 பேர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. அதில் 11 பேர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதுடன் கொடுமைபடுத்தப்பட்டுள்ளனர். இத்தனையும் ஆந்திர முதல்வரின் ஒப்புதலோடு நடந்துள்ளது என்றார்.