கொல்கத்தா: போராட்டத்தில் வன்முறை... 100க்கும் மேலான எதிர்க்கட்சியினர் மற்றும் போலீசார் படுகாயம்
கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் எதிர்பாராவிதமாக, வன்முறை வெடித்தது. இதில், 100க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் படுகாயமடைந்தனர்.
கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலத்தில் இடதுசாரி கட்சியினர் நடத்திய போராட்டம், எதிர்பாராத வன்முறையாக மாறியதில், 100க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் படுகாயமடைந்தனர்.
மேற்கு வங்கத்தில் நிலவும் அரசு நிர்வாகம் சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை கண்டித்து, இடதுசாரி கட்சிகள், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
இதன்படி, கொல்கத்தாவில் உள்ள தலைமைச் செயலகக் கட்டிடத்தை நோக்கி ஆயிரக்கணக்கான இடதுசாரி தொண்டர்கள் பேரணியாக வந்து, முற்றுகையிட முயற்சித்தனர். ஆனால், அதற்கு முன்பாக, தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவை போலீசார் அமல்படுத்தியிருந்தனர்.
இதையொட்டி, தலைமைச் செயலகத்தின் சுற்றுப்புற சாலைகளில் ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி, போராட்டக்காரர்களை தடுக்க முயன்றனர். ஆனால், போராட்டக்காரர்கள் தடையை மீறி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றதால், அங்கே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வேறு வழியின்றி போலீசார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இதற்கிடையே, போராட்டக்காரர்களும் போலீசார் மீது கற்களை வீசி சராமரியாக தாக்க தொடங்கினர்.
இதனால், கொல்கத்தா தலைமைச் செயலகத்தை சுற்றியுள்ள மேயோ சாலை, டஃப்ரீன் சாலை, ஹேஸ்டிங்ஸ் சாலை போன்ற இடங்கள், போர்க்களமாக மாறின.
போலீசாரின் தாக்குதலில், 100க்கும் அதிகமான இடதுசாரி தொண்டர்கள் படுகாயமடைந்தனர். இதேபோன்று, போராட்டக்காரர்கள் தாக்கியதில் 80க்கும் அதிகமான போலீசாரும் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, போராட்டத்தில் பங்கேற்ற 11 எம்எல்ஏ.,க்கள் உள்பட 200க்கும் அதிகமான இடதுசாரி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தும் உள்ளனர்.
இதுபற்றி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி கூறுகையில், ''இடதுசாரி கட்சியினர் வேண்டுமென்றே இத்தகைய வன்முறையை நிகழ்த்தி, மாநிலத்தில் அமைதியை சீர்குலைத்துள்ளனர்,'' என்றார்.