ரோட்டோர தாபாவுக்குள் புகுந்து பரோட்டா, லஸ்ஸி, ஜிலேபி சாப்பிட்ட அமைச்சர்கள்!
டெல்லி: கடும் பசி காரணமாக, சாலையோர தாபாவுக்குச் சென்ற மத்திய அமைச்சர்கள் சிலர் அங்கு ஆலு பரோட்டா, லஸ்ஸி, ஜிலேபி ஆகியவற்றை சாப்பிட்ட சுவாரஸ்ய செய்தி கசிந்துள்ளது.
ஹரியானாவில் பேட்டி பச்சாவோ அந்தோலன் திட்டத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியில் அவர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விரிவாகவும் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் ஹெலிகாப்டரில் டெல்லி திரும்ப அமைச்சர்கள் காத்திருந்தனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் கைவிடப்பட்டது. இதையடுத்து அமைச்சர்கள் கார்களில் டெல்லி கிளம்பினர்.
ஆனால் வழியில் அமைச்சர்களுக்கு பசி வயிற்றைக் கிள்ளியுள்ளது. டெல்லி போகும் வரை காத்திருக்க முடியாது என்று யோசித்த அவர்களுக்கு கூட வந்த ஒருவர் டெல்லிக்கு அருகே நெடுஞ்சாலையில் உள்ள பிரபலமான முர்தால் தாபாவில் சாப்பிடலாமா என்று யோசனை கூறியுள்ளார். இதை அனைத்து அமைச்சர்களும் உடனே ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து அமைச்சர்களின் கார்கள் தாபாவை நோக்கி விரைந்தது.
அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி, ரவி சங்கர் பிரசாத், நட்டா, மகாராஷ்டிர மாநில அமைச்சர் பங்கஜா முண்டே ஆகியோர் அங்கு வந்ததைப் பார்த்து தாபா ஊழியர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் வியப்புடன் பார்த்தனர்.
உடனடியாக தாபா உரிமையாளர் அம்ரிக் சிங்குக்கு ஊழியர்கள் போனைப் போட்டு முதலாளி உடனே வாங்க அமைச்சர்கள் வந்திருக்காங்க என்று கூறியதும் அவரும் அலறியடித்து ஓடி வந்தார். அமைச்சர்களோ, அமைதியா ரிலாக்ஸா இருங்க சாப்பிடத்தான் வந்துள்ளோம் என்று கூறி அவரை ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அமைச்சர்கள் ஆர்டர் கொடுத்த ஆலு பரோட்டா, மீத்தி லஸ்ஸி, ஜிலேபி ஆகியவற்றை அம்ரிக் சிங்கே தனது கையால் பரிமாறினாராம்.
சரி ஏன் பிரதமர் வரவில்லை என்று அமைச்சர்களுடன் சேர்ந்து ஒரு வெட்டு வெட்டிய அமைச்சரின் உதவியாளரிடம் கேட்டபோது, விஷயம் தெரிந்திருந்தால் அவரும் சந்தோஷமாக வந்திருப்பார். ஆனால் அமைச்சர்களுக்கு முன்பாக பிரதமர் வேகமாக போய் விட்டதால் அவரால் வர முடியவில்லை என்றார்.
அது சரி, மோடியை முன்னால் விட்டு விட்டு இவர்கள் மட்டும் சாப்பிட்டு விட்டு இப்படி ஒரு விளக்கமாக்கும்....!