கண்ணில் மிளகாய் பொடி தூவினார், செல்போனில் திட்டுகிறார்.. மனைவி மீது கணவன் போலீசில் புகார்
ஹுப்பள்ளி: கண்ணில் மிளகாய் பொடி தூவிவிட்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி எஸ்.எம்.எஸ் மூலமாகவும் திட்டுகிறார் என்று கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் கர்நாடக மாநிலம் தார்வாரில் நடந்துள்ளது.
ஹூப்பள்ளி-தார்வார் இரட்டை நகரை சேர்ந்தவர் சென்னபசவன கவுடா (44). அதே ஊரை சேர்ந்த மஞ்சுளா (35) என்பவருடன் 18 வருடங்களுக்கு முன்பு கவுடாவுக்கு திருமணமானது.
இந்நிலையில் சமீபகாலமாக கணவன், மனைவியிடையே தகராறு அதிகரித்து வந்துள்ளது. கடந்த 17ம்தேதி இதேபோல ஏற்பட்ட தகராறின்போது, கணவன், மனைவியிடையே கை கலப்பு ஏற்பட்டுல்ளது. அப்போது கணவன் கண்களில் மிளகாய் பொடியை எடுத்து வீசிவிட்டு தனது தாய் வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார் மஞ்சுளா.
கண் எரிச்சலால் கடும் அவதிப்பட்ட கவுடா ஓரளவுக்கு தேறியுள்ளார். இந்நிலையில் அவரது செல்போனுக்கு மனைவி மஞ்சுளாவிடமிருந்து அவ்வப்போது எஸ்.எம்.எஸ்கள் வரத்தொடங்கியுள்ளன. அதில் கவுடாவின் ஆண்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தகாத வார்த்தைகளால் மஞ்சுளா திட்டியுள்ளார்.
இந்த எஸ்.எம்.எஸ் தொல்லையை தாங்க முடியாமல் தவித்த சென்னபசவன கவுடா, வித்யாகிரி பகுதி காவல் நிலையத்தில் தனது மனைவிக்கு எதிராக புகார் அளித்துள்ளார். மனைவி கொடுமை தாங்க முடியவில்லை என்று கணவன் புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.