கணவன் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பது வரதட்சணை கொடுமையாகாது: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: கணவன் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை வரதட்சணை கொடுமையாக கருதி தண்டிக்க முடியாது' என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். இவருக்கும் பினிபென் என்பவருக்கும் 96-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், விவாகரத்தான ஜேசுபென் என்ற பெண்ணுடன் ராகேஷுக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட தகராறில் ராகேஷ், பினிபென் இரு வரும் பிரிந்தனர்.
பெற்றோர் சமரசத்தின்பேரில், கணவரின் வீட்டிலேயே பினிபென் தங்கியிருந்தார். அங்கு பின்னர் அவர் மொட்டை மாடியில் தங்க வைக்கப்பட்டார். இதனால், மனமுடைந்த பினிபென் 2004-ஆம் ஆண்டு மார்ச் மாதம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
குஜராத் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ராகேஷ், அவரது தந்தை, தாய், தொடர்பு வைத்திருந்த பெண், அண்ணன் மற்றும் அண்ணியை கைது செய்து வரதட்சணை கொடுமைச் சட்டம், பிரிவு 498ஏ-ன் கீழ் வழக்கு நடத்தினர். ராகேஷுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பெற்றோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ராகேஷுடன் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அண்ணன், அண்ணி ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டனர். இத்தீர்ப்பை குஜராத் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இம்மனு நீதிபதிகள் எஸ்.ஜே.முகேபதாய, தீபக் மிஸ்ரா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
தற்கொலை செய்து கொண்ட பினிபென், உள்ளூர் நடைமுறைகளின்படி, விவாகரத்து பெற்றுவிட்டதாக தனது தங்கையிடம் இறப் பதற்கு சில தினங்களுக்கு முன் கூறியுள்ளார். ராகேஷ் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
மனரீதியாக கொடுமைப்படுத்தினாலும், வரதட்சணைக் கொடுமைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கலாம் என்று ஏற்கெனவே சில வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் அவர் மனரீதியாக துன்புறுத்தப்பட்டார் என்பதற்கான ஆதாரங்கள் காட்டப்பட வேண்டும். வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு என்பது மட்டுமே அவர் மனரீதியாக துன்புறுத்தப்பட்டார் என்பதற்கு ஆதாரமாக அமையாது.
பெண்ணை கொடுமைப்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே தண்டிக்க முடியும். எனவே, அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
The Supreme Court has ruled that a husband's illicit relationship with another woman may not amount to 'cruelty' towards his wife and count as a ground for abetment to her suicide.