ஹைதராபாத்தில் வரலாறு காணாத மழை: ஒரே நாளில் 75 மி.மீ மழை பதிவு
ஹைதராபாத்: தெலுங்கானாவில் அடுப்பு, பாத்திரம் எதுவும் இன்றி வெறும் தரையில் ஆம்லேட் போடும் அளவிற்கு வெயில் கொளுத்திய நிலையில் தற்போது கோடை மழை கொட்டி வருகிறது. ஹைதராபாத்தில் இன்று காலை திடீரென கொட்டிய மழையால் வெப்பம் மறைந்து குளுமை பரவியது.
அதிகாலை 3.30 மணிக்கு இடி மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை காலை 6 மணி வரை நீடித்தது. இன்று 4 மணி நேரத்தில் 75 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாகவே வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பகலில் பொதுமக்கள் வெளியே வரவே அஞ்சும் நிலை நிலவுகிறது. அனல் காற்று வீசுவதால் கடும் அவதிப்படுகிறார்கள்.
வனப்பகுதியில் காட்டுத்தீ
அனல் காற்று வீசியதால் திருப்பதி காட்டுப்பகுதியில் தீப்பிடித்தது. திருப்பதி மலையில் நாராயணகிரி மலையில் கடும் வெயிலின் வெப்பம் காரணமாக மரங்களில் தீப்பிடித்தது. தீ மளமளவென்று மற்ற மரங்கள், செடி, கொடிகளில் பரவியது.
காடுகள் எரிந்து நாசம்
ஆனால் அனல் காற்றால் தீ வேகமாக பரவியது. இதனால் தீயை அணைக்க கடுமையாக போராடினர். ஒரு வழியாக காட்டுத்தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மரங்கள் எரிந்து நாசமானது.
உயிர்பலி அதிகரிப்பு
தெலுங்கானா மாநிலத்தில் புதன்கிழமையன்று ஒரே நாளில் வெயிலுக்கு 41 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதே போல் ஆந்திராவில் ஒரே நாளில் 32 பேர் இறந்தனர்.
கோடை மழை
இந்த நிலையில் தெலுங்கானாவில் சில இடங்களில் மழை பெய்தது. அடிலாபாத் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்து குளிர்வித்தது. அங்கு 63 மில்லி மீட்டர் மழை பதிவானது.
குறைந்த காற்றழுத்தம்
தெலுங்கானா மாநில கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி இருப்பதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே போல் ஆந்திரா மாநிலத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
ஹைதராபாத்தில் மழை
ஹைதராபாத்தில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு இடி மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை காலை 6 மணி வரை நீடித்தது.
இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு பகுதிகளிலும் மரம் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டது.
75 மி.மீ மழை பதிவு
திடீர் கனமழை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வுமைய அதிகாரிகள், இன்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 75 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு என்று கூறினர். கடைசியாக கடந்த 2006ல் ஒரே நாளில் 28 மி.மீ. மழை பதிவானது. அதன் பிறகு இன்று பெய்த மழையின் அளவே அதிகமானது.
ஒரே நாளில் கொட்டிய மழை
பொதுவாக மே மாதத்தில் வழக்கமாக வெப்பச் சலனத்தால் பெய்யக் கூடிய மொத்த மழை அளவையும் இன்றைய ஒரு நாள் மழை அளவு தாண்டிவிட்டது என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் மகிழ்ச்சி
கடந்த சில வாரங்களாக கடுமையான வெயிலால் தவித்து வந்த மக்கள் திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்தனர். சாலைகளில் நீர் தேங்கினாலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டாலும்கூட கனமழை பெய்ததில் பெருமகிழ்ச்சி என பொதுமக்கள் தெரிவித்தனர்.
மழை தொடரும்
இன்று காலையில் ஹைதராபாத்தில் குளு குளு சீசன் நிலவியது வெப்ப நிலை 68 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் குறைவாக இருந்தது. அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.