சக ஊழியர்களின் பாலியல் தொல்லையை தாங்க முடியாமல் 17 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சக ஊழியர்களின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் 17 வயது சிறுமி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள மைசம்மா நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கே.பி.ஹெச்.பி. காலனியில் உள்ள ஸ்ரீராம் டிரஸ்ஸஸ் என்ற துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் வேலைக்கு சேர்ந்ததில் இருந்து அவரை சக ஊழியர்கள் கிண்டல் செய்து வந்துள்ளனர். மேலும் பாலியல் தொல்லையும் கொடுத்ததாக கூறப்படுகிறது.
சக ஊழியர்களின் பாலியல் தொல்லையை தாங்க முடியாமல் அந்த சிறுமி கடந்த 26ம் தேதி வேலை முடித்து வீட்டுக்கு சென்றதும் மண்ணெண்ணெய்யை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.
இகு குறித்து சிறுமியின் உறவினர் வெங்கடேஸ்வருலு கூறுகையில்,
சிறுமி வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் இருந்து அவரை சக ஊழியர்கள் கிண்டல் செய்து, தொல்லை கொடுத்துள்ளனர். அவரிடம் அசிங்கமாக பேசியுள்ளனர் என்றார்.
சிறுமியை துணிக்கடையில் பணிபுரியும் 3 ஆண்கள் கொடுமைப்படுத்தியதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இது பற்றி போலீசார் கூறுகையில், சக ஊழியர்கள் சிறுமியை தொடக் கூடாத இடங்களில் தொட, அவரிடம் சில்மிஷம் செய்ய முயன்றுள்ளனர் என்றனர்.