ஏழுமலையானுக்கு நகை காணிக்கை - தெலுங்கானா முதல்வருக்கு ஹைதராபாத் ஹைகோர்ட் நோட்டீஸ்
நேர்த்திக் கடனாக ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளை திருப்பதி ஏழுமலையானுக்கு அளித்தது தொடர்பாக தெலுங்கானா முதல்வருக்கு ஹைதரபாத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஹைதராபாத்: தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ், திருப்பதி உள்ளிட்ட கோயில்களுக்கு அளித்த காணிக்கை குறித்து பதிலளிக்குமாறு ஹைதராபாத் ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா என்ற தனி மாநிலம் பிரிக்கப்பட்டால் திருப்பதி, அலமேலுமங்காபுரம் கோயில்களுக்கு காணிக்கை செலுத்துவதாக தெலுங்கு ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், தற்போதைய தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் வேண்டி கொண்டார்.
தெலங்கானா தனி மாநிலம் உருவானதைத் தொடர்ந்து திருப்பதி வெங்கடாசலபதிக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கடந்த மாதம் 24ஆம் தேதி காணிக்கையாக வழங்கினார். இதேபோல் அலமேலுமங்காபுரம், வீரபத்திர சுவாமி கோயில்களுக்கும் தங்க நகைகளை காணிக்கை செலுத்தினார்.
இந்நிலையில் தனது தனிப்பட்ட வேண்டுதல்களுக்காக தெலங்கானா முதல்வர் பொதுமக்களின் பணத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் அவர் செலவிட்ட தொகையை நீதிமன்றம் அவரிடம் இருந்து பெற வேண்டும் என்றும் ஹைதராபாத் ஹைகோர்ட்டில் சமூக ஆர்வலர்கள் பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை ஹைதராபாத் தலைமை நீதிபதி (பொறுப்பு) ரமேஷ் ரங்கநாதன், நீதிபதி ஷமீம் அக்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநில அரசால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட காணிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெலங்கானா மாநில தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.