தனியாக வரும் பெண்களுக்கு 'நோ' ரூம்- ஹைதராபாத் ஹோட்டலை வெளுத்து வாங்கிய நடிகை!
ஹோட்டலில் தனியாக வரும் பெண்ணுக்கு அனுமதி கிடையாது என்று ஐதராபாத் விடுதி கூறியதால் ரோட்டில் நிற்பதாக நடிகை நுபுர் முகநூலில் பதிவிட்ட கருத்து வைரலானது.
ஐதராபாத் : தனியாக வரும் பெண்களுக்கு ரூம் கிடையாது என தெரிந்தும் அந்த ஓட்டலில் ரூம் புக் செய்தது ஏன் என்று கோஇப்பிபோ நிறுவனத்திற்கு நடிகை நுபுர் சரஸ்வத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 22 வயது நடிகை நுபுர் சரஸ்வத் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். சிங்கப்பூரில் இருந்து கடந்த சனிக்கிழமை ஐதராபாத்திற்கு வந்துள்ளார் நுபுர். அப்போது ஓட்டல் நிர்வாகம் தனியாக வரும் பெண்களுக்கு தங்கும் விடுதி கிடையாது என்று கூறியுள்ளது. இது குறித்து நுபுர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.
அதில் "நான் தனியாக வந்திக்கும் பெண் என்பதால் ஐதராபாத்தை சேர்ந்த ஓட்டல் ஒன்று எனக்கு ரூம் தர மறுத்துவிட்டது. நான் என்னுடைய ஆன்லைன் புக்கிங்கை காண்பித்த போதும் அவர்கள் ரூம் தர ஒப்புகொள்ளவில்லை, இதனால் நான் ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருக்கிறேன்" என்று கூறியிருந்தார். இந்த பதிவு ஆயிரம் ஷேர்கள் மற்றும் ஆயிரத்து 600 பதில்களைப் பெற்று வைரலானது.
ரூம் கிடையாது
தனியாக வரும் பெண்களுக்கு அனுமதி கிடையாது என்று ஓட்டல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பு பலகையையும் நுபுர் தனது முகநூலில் போட்டிருந்தார். இதே போன்று ஓட்டல் நிர்வாகத்தில் விதிகள் தெரிந்திருந்தும் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யும் கோஇப்பிபோ எதற்காக இந்த விடுதியில் ரூம் புக் செய்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாற்று ஏற்பாடு
சமூக வலைதளத்தில் கடும் விமர்சனத்திற்கு ஆளான நிலையில் கோஇப்பிபோ நிறுவனம் நுபுரை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதோடு, சுற்றுலாவிற்கான பதிவுகளை தங்களது இணையதளத்தில் மேம்படுத்தவதாகவும் உறுதியளித்துள்ளனர். மேலும் மாற்று விடுதியில் நுபுர் தங்குவதற்கு மாற்று ஏற்பாடும் செய்து தந்துள்ளனர்.
பாதுகாப்பிற்காக
தனியாக வரும் பெண்களுக்கு விடுதிகிடையாது என்று கூறுவது பெண்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல என்று ஹோட்டல் நிர்வாகம் கூறியுள்ளது. ஏனெனில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாகவே தனியாக வரும் பெண்களுக்கோ அல்லது திருமணம் ஆகாமல் வரும் ஜோடிகளுக்கோ ரூம்கள் அளிக்கப்படுவதில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
நொண்டி சாக்கை ஏற்க முடியாது
எனினும் ஹோட்டலின் விதிகள் தெரிந்தும் எதற்காக அங்கு தான் இருப்பேன் என்று அடம்பிடிக்கிறீர்கள் என்று சிலர் விமர்சிப்பதாக நுபுர் தன்னுடைய முகநூலில் கேட்டுள்ளார். இவர்கள் கூறும் நொண்டி சாக்குகளை வைத்து நான் சமாதானம் அடைய மாட்டேன்.
ஆண் துணையில்லாமல் செல்லக் கூடாதா?
பாதுகாப்பற்ற இடமாக இருந்தால் அங்கு நானே தங்கமாட்டேன், ஆனால் ஆண்கள் இல்லாமல் இங்கு பாதுகாப்பாக தங்க முடியாது என்ற கூறும் சிஸ்டத்தை நான் கண்டிக்கிறேன். அப்படியானால் நாட்டில் ஆண் துணையின்றி நான் எங்குமே செல்ல முடியாதா என்றும் நுபுர் கேள்வி எழுப்பியுள்ளார்.