2 வருஷத்துக்கு கவலையே இல்லை.. தெம்பாக காணப்படும் தெலுங்கானா விவசாயிகள்... அம்புட்டு மழை!
ஹைதராபாத்: கடந்த ஒரு வாரமாக ஆந்திரா, தெலுங்கானாவில் அடித்து ஊற்றிக் கொண்டிருக்கும் மழையால் இரு மாநிலமும் திக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.அதேசமயம், தெலுங்கானாவில் நிலவி வந்த கடும் வறட்சி காணாமல் போய் விட்டது. அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
இன்னும் 2 வருடத்துக்கு எங்களது விவசாயிகள் நிம்மதியாக இருக்கலாம். அத்தனை துயரமும் அடித்துக் கொண்டு போய் விட்டது என்று தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.
மறுபக்கம் ஆந்திராவில் இந்த மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் நகரம் மிதந்து கொண்டிருக்கிறது.
விடாமல் பெய்யும் மழை
ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த ஒரு வாரமாக மழை விடாமல் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது. ஹைதராபாத் நகரம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்துக் கொண்டுள்ளது.
மிதக்கும் கரீம் நகர் மாவட்டம்
தெலுங்கானாவின் கரீம்நகர் மாவட்டம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான கிராமத்தினர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இங்குள்ள மணியாறு அணை நிரம்பி வழிகிறது.
நிரம்பி வழியும் அணைகள்
மணியாறு அணை இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. ஆனால் தற்போது பெய்து வரும் மழையால் அணை நிரம்பி வழிகிறது. இதை வேடிக்கை பார்க்க பெரும் கூட்டம் கூடி வருகிறது.
ஆயிரக்கணக்கானோர் கூடி வேடிக்கை
மணியாறு அணைக்கு பலரும் படையெடுத்து வருகின்றனர். அணை நிரம்பி வழிவதை வேடிக்கை பார்க்கின்றனர். போட்டோ எடுக்கின்றனர். செல்பி எடுக்கின்றனர். குதூகலிக்கின்றனர்.
வறட்சி ஒழிந்தது
இந்த பெரு மழையால் தெலுங்கானாவை கடந்த நான்கு ஆண்டு காலம் வாட்டி வதைத்து வந்த வறட்சி ஓடி விட்டது. இந்த வறட்சியால் கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தெலுங்கானாவில் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து அணைகளும் நிரம்பின
தெலுங்கானாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. கோதாவரி ஆறும் பொங்கிப் பெருகி வெள்ளப் பெருக்கெடுத்துக் காணப்படுகிறது. அதன் துணை நதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
2 வருடத்துக்கு கவலை கிடையாது
இதுகுறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறுகையில் இன்னும் 2 வருடத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைத்து விட்டது. எனவே நமது விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை என்றார்.
வெள்ள அபாயம்
அதேசமயம் தொடர் மழையால் பல மாவட்டங்களிலும் வெள்ள அபாயம் நீங்கவில்லை. ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்திலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.