பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை: நிதிஷ்குமார் திட்டவட்டம்
பாட்னா: பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை. நான் முட்டாள் அல்ல, அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொண்டவன் என்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று பாட்னாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பிரதமர் பதவிக்கு போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை. நான் முட்டாள் அல்ல, அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொண்டவன். எனது ஐக்கிய ஜனதாதளம் ஒரு சிறிய கட்சி. எனவே, நான் பிரதமர் ஆகவேண்டும் என்று நினைக்கவில்லை.
ஒரு பெரிய கூட்டணிக்கு தலைமை வகிக்கும், மக்களின் உணர்வுகளை பூர்த்தி செய்யும் திறன் உள்ளவர்கள்தான் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்கள். நான் பிரதமர் பதவிக்கு தகுதியானவன் என்று எப்போதும் சொன்னது இல்லை. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
5 ஆண்டுகளுக்கு முன்பு, மோடியை யாருக்கு தெரியும். ஆனால், அவர் தங்களது உணர்வுகளை பூர்த்தி செய்வார் என்று மக்கள் நினைத்ததால், அவரை பிரதமராக தேர்ந்தெடுத்தனர் என்றார்.