ஏகப்பட்ட அச்சுறுத்தல்: இந்த ஆண்டாவது மோடி குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டில் நின்று உரையாற்றுவாரா?
டெல்லி: தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் சுதந்திர தினத்தன்று டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டில் நின்று உரையாற்றுமாறு உள்துறை அமைச்சகம் அவரை வலியுறுத்தியுள்ளது.
குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டில் நின்று உரையாற்ற மோடி விரும்பவில்லை. ஆனால் அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் அவரை கண்ணாடி கூண்டுக்குள் நின்று உரையாற்றுமாறு உள்துறை அமைச்சகம் வலியுறுத்துகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
மோடிக்கு அதிகம் அச்சுறுத்தல் உள்ளது என்று உளவுத் துறை தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தியை அடுத்து அதிக அச்சுறுத்தல் இருக்கும் பிரதமர் மோடி என்று உளவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதனால் தான் வரும் 15ம் தேதி குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டில் நின்று உரையாற்றுமாறு மோடியை வலியுறுத்துங்கள் என உள்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு மோடி குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டில் நின்று உரையாற்ற மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி வரும்போதிலும் அவர் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது, பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருவது ஆகியவற்றால் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லிக்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. நகரில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.