"எனக்கு பேஷன் டிசைனர் எல்லாம் கிடையாது"... மாணவர்களின் சுவாரஸ்ய கேள்விக்கு மோடி சிம்பிள் பதில்
டெல்லி : பிரதமர் மோடியின் ஆடைகள் இந்தியா மட்டுமின்றி உலகநாடுகள் மத்தியிலும் பிரபலமாகியுள்ள நிலையில், தான் ஆடை வடிவமைப்பாளர் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை என்று மோடி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுடன் உரையாடினார். பிரதமர் மோடி உடை அலங்காரத்தில் தனி உணர்வு கொண்டு உள்ளார் என்றும் பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களின் போது அவருடைய உடை அலங்காரமானது இந்திய ஆடைகளுக்கு ஒரு தூதராக உள்ளது என்றும் மாணவர்கள் பாராட்டினர்.
இதற்கு விளக்கம் அளித்து பேசிய பிரதமர் மோடி, "நான் ஆடை வடிவமைப்பாளர் வைத்து உள்ளேன் என்பது ஒரு வதந்தியாகும். நான் சாதாரண முறையிலே தான் ஆடை அணிகிறேன்." என்று கூறினார்.
பிரதமர் மோடியின் குர்தாவானது மிகவும் பிரபலமாகிவிட்டது. இதுகுறித்து நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? என்று மாணவர்கள் மோடியிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு மோடி பதிலளித்து பேசியதாவது...
"நான் மிகவும் பின்தங்கிய பகுதியில் இருந்து வந்தவன்... குஜராத்தில் குளிராக இருக்காது... எனவே நான் குர்தா-பைஜாமா அணிந்தேன். என்னுடைய ஆடைகளை நானே துவைத்துக் கொள்வேன்.
முழுசட்டையானது துவைப்பதற்கு அதிகநேரம் எடுத்துக் கொள்ளும். எனவே முழுசட்டையை கட் செய்து நான் குர்தாவாக அணிந்துக் கொள்கிறேன். இது என்னுடைய பணியை எளிதாக்குகிறது. எனவே நான் ஷார்ட் குர்தாவை அணிந்துக் கொள்கிறேன்." என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
"என்னுடைய ஆடைகள் மிகவும் நேர்த்தியாக இருக்குமாறு தைத்துக் கொள்கிறேன். எனக்கு பேஷன் டிசைனர்கள் யாரும் கிடையாது. நாம் மிகவும் நேர்த்தியாகவும், விழாவிற்கு ஏற்றபடியும் ஆடைகளை அணியவேண்டும்,"
என்னுடைய துணியை சலவைக்கு போடுவதற்கு என்னிடம் காசு இருந்தது கிடையாது, என்னுடைய ஆடைகளை நானே தேய்த்துக் கொள்வேன்," என்றும் அவர் கூறினார்.
பிரதமர் தனது காலணி குறித்தும் பேசினார். "பள்ளி முடிந்தது, சாக்பீஸ்களை சேகரித்து வருவேன், அதனை என்னுடைய காலணியின் மீது தேய்த்து வெண்மையாக்குவேன். இவை அனைத்தையும் செய்தது நான்தான். என்று கூறினார்.