திமுகவில் எனக்கு அங்கீகாரமே கிடைக்கவில்லை... குஷ்பு பரபரப்பு புகார்!
டெல்லி: இந்தியாவின் ஒற்றுமைக்கான ஒரே கட்சி காங்கிரஸ் தான் என்று அந்த கட்சியில் சேர்ந்துள்ள நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தான் தனக்கான இடத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து வெளியேறிய நடிகை குஷ்பு இன்று மாலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அக்கட்சியில் சேர்ந்தார். அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடன் இருந்தார்.
காங்கிரஸில் சேர்ந்த பிறகு குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
திமுகவில் எனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. அதனால் ஓராண்டுக்கு முன்பே திமுகவை விட்டு விலக முடிவு செய்தேன். காங்கிரஸ் கட்சி மீது எனக்கு ஈடுபாடு உண்டு. அதனால் தான் காங்கிரஸில் சேர்ந்துள்ளேன்.
இந்தியாவின் ஒற்றுமைக்கான ஒரே கட்சி காங்கிரஸ் தான். இப்போது தான் நான் உரிய இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளேன். நான் நாட்டின் நன்மைக்காக பாடுபடுவேன். தமிழகம் என்று மட்டும் இல்லாமல் மொத்த நாட்டின் நன்மையை கருத்தில் வைத்து செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒற்றுமைக்கான ஒரே கட்சி என்று கூறிய குஷ்புவுக்கு தமிழக காங்கிரஸில் நிலவும் கோஷ்டி பூசல் பற்றி தெரியாதா என்ன.