சி.பி.ஐ. நற்பெயரை காக்கவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்: ரஞ்சித் சின்ஹா
டெல்லி: சி.பி.ஐ.யின் நற்பெயரைக் காக்கவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன் என்று சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்துள்ளார்.
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவிக்கையில், ''இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள் தங்கள் புலனாய்வுத் திறன்களை வளர்த்துக்கொள்ள சி.பி.ஐ. அகாடமியில் உரிய பயிற்சி பெற வேண்டும்" என்று கூறியது.
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.பி.லோகுர் அடங்கிய அமர்வு, ''நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக தனிப்பட்ட கருத்து எதையும் கூற வேண்டாம். சட்டரீதியான விவகாரங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.
இதுகுறித்து டெல்லியில் ரஞ்சித் சின்ஹா கூறும்போது, ''சி.பி.ஐ.யின் நற்பெயரைக் காக்கவே இந்த விவகாரத்தில் நான் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருந்தது. அதனால்தான் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்தேன்.
நான் முக்கியமானவன் அல்ல, எனது அமைப்புதான் (சி.பி.ஐ.) முக்கியமானது. அந்த அமைப்பின் கௌரவத்தைக் காப்பாற்றியதற்காக உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.